GO 249 ஐ திரும்ப பெறவேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் - ஆசிரியர் மலர்

Latest

22/05/2020

GO 249 ஐ திரும்ப பெறவேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


தமிழக அரசு கரோனா தொற்று நோய் காலத்தில் சிக்கன நடவடிக்கைகள் எனும் பெயரில் அரசு அலுவலகங்களின் அன்றாட நிர்வாக நடைமுறைச் செலவினங்களில், வருடாந்திர நிதி ஒதுக்கீடுகளில் கணிசமான அளவிற்கு நிதிவெட்டு செய்திடும் தவறான நடவடிக்கைகளையும், அரசுப்பணியிடங்களுக்கு புதிய நியமனங்கள் செய்வதை முற்றிலுமாக தடை செய்து இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவினை  சிதைத்திடும் மோசமான செயல்பாடுகளையும் முற்றிலும் கைவிடுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் நா. சண்முகநாதன், துணைப் பொதுச் செயலாளர் இலா. தியோடர் ராபின்சன், மாநிலப் பொருளாளர் ஆ. கணேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து விட்டு தமிழக அரசுப் பணிக்கு பல்லாண்டுக் கணக்கில் காத்துக்கிடக்கும் வேளையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படமாட்டாது
என்பதும், புதிய பணி நியமனங்களுக்கு தடை விதித்திருப்பதும் சமூக பதற்றத்தை அதிகரிக்கச்செய்யும் மோசமான நடவடிக்கையாகும்.

தமிழக அரசு அலுவலக நடைமுறை தொடர் செலவினங்களில் 20% நிதி வெட்டு செய்திருக்கிறது. அலுவலகத்திற்கு தேவையான தளவாடச்சாமாண்கள் வாங்குவதற்கான நிதியில் 50% நிதி. வெட்டு செய்திருக்கிறது.
அரசுதுறை  நிறுவனங்களின் அறிவிக்கைகள், அறிவிப்புகள், வெளியீடுகள், தகவல்கள் அளித்தல் மற்றும் விளம்பரங்களுக்கான செலவினத்தில் 50% வெட்டு அறிவித்து இருக்கிறது.
கரோனாக் காலத்தில் அலுவலகங்களின் அமைப்பு மற்றும் அன்றாடச் செயல்பாடுகள்  சமூக இடைவெளி கூடியதாக மாற்றி அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ள இக்காலக்கட்டத்தில் மேற்கண்டவாறான நிதி   வெட்டுகள் சீரான அலுவலக நடைமுறைகளை கெடுத்துவிடும் ஆபத்து நிறைந்ததாகும்.
உயர் அரசு அலுவலர்களுக்கான விமான பயணங்கள் தடை செய்யப்படுவது போன்று ,ஆட்சியாளர்களின் விமானப்பயணங்களும் தடை செய்யப்படுமா ?என்று எழும் கேள்வி தவிர்க்க இயலாத ஒன்றாகிறது.
அரசின் உயர்  அலுவலர்களுக்கு ஒரு  விதமாகவும், ஆட்சியாளர்களுக்கு வேறு விதமாகவும் சிக்கன நடவடிக்கைகள் அமைந்து விடக்கூடாதே? இவ்வாறு அமைந்து விட்டால் அரசின் செயல்பாடுகளில் பல்வேறு மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் தோன்றிவிடுமே? என்னும் கவலை எழுகிறது .
பெட்ரோல் விலை அன்றாடம்  உயர்ந்து வரும் இக் காலக்கட்டத்தில்,
பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள காலத்தில், பயணக்கட்டணங்கள் பல மடங்குகளில் உயர்த்தப்படும் என்னும் தகவல்கள் கசியவிடப்படும் கரோனாக்காலத்தில் கரோனா சிக்கன நடவடிக்கை என்னும் பெயரில் வழக்கமான பயணப்படித் தொகையில் 25% மறுப்பது  அநீதியான செயலாகும்.

பொதுமாறுதல்கள்  ஆசிரியர்-அரசு ஊழியருக்கு 2020-2021ஆம் ஆண்டில் வழங்கப்படாது என்று ஒட்டுமொத்தமாக  தடை விதிப்பது  என்பதும், தேவையின் அடிப்படையிலும்,நிர்வாகக்காரணங்களின் அடிப்படையிலும்  இட மாறுதல்கள் மற்றும் மனமொத்த மாறுதல்கள் வழங்கப்படும் என்பதும் பல்வேறு முரண்பாடுகளும், ஐயப்பாடுகளும்  நிறைந்ததாகும்.
இத்தகு நிலைப்பாடுகள் ஒருசார்புத்தன்மை கொண்டதாக உருமாறிவிடுமோ? என்னும் அச்சத்தைத் தருகிறது. இவை போன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றது.
கரோனா தொற்று ஒழிப்பில் முனைப்போடும் , அக்கறையோடும், உயிரை பணயம் வைத்தும்,உயிர். அச்சம்  தவிர்த்தும்  பணியாற்றிவரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அலுவலர்களை பாராட்டி ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்கிட  வேண்டிய தமிழக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு  ஆசிரியர்,அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அலுவலர்களின் மீது  வெவ்வேறு அரசு ஆணைகளின் வழியில் தாக்குதல் தொடுத்து வருகிறது  வேதனைக் கொள்ளச் செய்கிறது
; பழிவாங்குகிறது என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஐயமும், அச்சமும் கொள்கிறது. தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

அரசு அலுவலகங்களில் ஊதாரித்தனமான செலவினங்கள் அன்றாடம் நடைபெற்று  வருவது போன்றும், இந்த ஊதாரித்தன செலவினங்களை தமிழக அரசு கண்டறிந்து தடுத்து நிறுத்தி செலவினங்களை குறைத்து அரசின்  வருமானத்தை பெருக்குவதும் போன்று ஒரு போலியான, பொய்யான தோற்றத்தை தமிழக மக்களிடம் தமிழக அரசு ஏற்படுத்திட முயற்சிக்கிறது.
இது போன்ற  தவறான செயல்பாடுகளை தமிழக அரசு கைவிடுவதும், திரும்பப்பெறுவதுமே ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும்  அரசு உயர் அலுவலர்களிடம் நல்லெண்ணத்தை உருவாக்கும்; ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459