காஷ்மீர் முதல் குமரி வரை பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும் விமானப்படை விமானங்கள் - ஆசிரியர் மலர்

Latest

01/05/2020

காஷ்மீர் முதல் குமரி வரை பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும் விமானப்படை விமானங்கள்


புதுடில்லி: கொரோனா தடுப்பு பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் வகையில், மே 3ம் தேதி, மருத்துவமனைகள் மீது மலர்தூவப்படும். கடற்படை கப்பல்கள் கடலில் அணிவகுப்பு நடத்தும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவதளபதி நரவானே,
விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது பிபின் ராவத் கூறியதாவது: ஆயுதப்படைகள் சார்பில் கொரோனா போராளிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், ஊர்காவல் படையினர், மீடியா துறையை சேர்ந்தவர்கள், இந்த கடினமான நேரத்தில், மக்களை எப்படி காப்பது என்ற அரசின் செய்தியை கொண்டு சேர்த்துள்ளனர். கொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் விதமாக, மே 3ல் காஷ்மீர் முதல் குமரி வரை விமானப்படை விமானங்கள் பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும். கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும்.
கடற்படை விமானங்களும், மருத்துவமனைகள் மீது மலர் தூவும். ராணுவம் சார்பில் அணிவகுப்பு பேண்ட் வாத்திய இசைநிகழ்ச்சி நடத்தப்படும். மாவட்டங்களில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் முன்பு ராணுவம் சார்பில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். போலீஸ் நினைவிடத்தில் பாதுகாப்பு படை சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்
கொரோனா பாதித்த சிவப்பு மண்டலங்களில், போலீசார் சிறப்பான பணியை மேற்கொள்கின்றனர். அந்த பகுதியில் எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்க முடியும்.
அங்கு, ராணுவத்தை களமிறக்குவதற்கான தேவையில்லை. பயங்கரவாதம் அல்லது ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கையை கைவிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ராணுவ தளபதி நரவானே: கொரோனா விவகாரத்தை கையாள்வதில் எந்த பிரச்னையும் இல்லை. ராணுவத்தில் கொரோனா பாதித்த முதல் நபர் குணமடைந்து பணியில் சேர்ந்துவிட்டார். ராணுவத்தில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில்,5 பேர் குணமடைந்து பணியில் சேர்ந்துவிட்டனர். கொரோனா காரணமாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை கைவிடவில்லை. ராணுவத்தினரால்
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், மாநில நிர்வாகத்திடம் அளிக்கப்படும். அது தேவையான நடவடிக்கைகள் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
விமானப்படை தளபதி பதூரியா: தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். விமானப்படையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வீரர்களின் நலனை காக்கும் நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459