உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று உச்சகட்டமாக இந்தியாவில் 12 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இதுவரையில் 414 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தற்போது மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மே 3ம் தேதி வரை தொடரும் என பிரதமர் மோடி இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.


அதன்படி இந்தியா முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் ரயில் சேவையும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்தது. பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை நீட்டித்ததையடுத்து பயணியர் ரயில் சேவைகள் அனைத்தும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் சரக்கு ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என்றும் ரயில்வே துறை தெரிவித்திருக்கிறது.
நாடு முழுவதும் சுமார் 9000 பயணிகள் ரயில்கள், 3000 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் என மொத்தம் 15,523 ரயில் சேவைகள் ரத்தாகி இருக்கின்றன.

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என நினைத்து 15ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட சுமார் 39 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்ததோடு அவற்றுக்கான முழு கட்டணமும் பயணிகளிடம் திருப்பி செலுத்தப்படுவதாகவும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கிலும் ரயில்வே கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் கவுண்டர்களில் முழு கட்டணத்தை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே கவுண்டர்கள் செயல்படாமல் இருக்கும் நிலையில் அது திறக்கப்பட்ட பிறகு ரத்து செய்யப்பட்டதற்கான கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.