முதலமைச்சரின் அறிவிப்புகளுக்கு வரவேற்பு! தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல். - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/04/2025

முதலமைச்சரின் அறிவிப்புகளுக்கு வரவேற்பு! தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.



முதலமைச்சரின் அறிவிப்புகளுக்கு வரவேற்பு!
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட
முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!
     தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

                  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன் சார்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்புக்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. ஆனால் அதே நேரத்தில் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட பல முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. 

                   இது தொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: 

                   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.04.2025 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அந்த அறிவிப்புகளில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஆசிரியர்களின் பிரதான வாழ்வாதாரக் கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய அறிவிப்பில் தேர்தல் வாக்குறுதியில்  குறிப்பிடாத சில அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன. அவைகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மிக முக்கிய வாக்குறுதிகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. 

                     சரண் விடுப்பு ஊதியம் 01.10.2025 முதல் வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஊதியத்தை குறைந்தபட்சம் 01.04.2025 முதல் அறிவிப்பதுதான் சரியானதாக இருக்கும்.  ஏற்கனவே ஐந்து ஆண்டு காலம் சரண் விடுப்பு ஊதியத்தை ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் இழந்துள்ளார்கள். 

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வரிசை எண்: 309ல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று தான் கூறப்பட்டுள்ளது. எனவே, ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவையே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்கவில்லை. எனவே, உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். 

                      அதேபோன்று தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் வரிசை எண்: 311ல் கூறியுள்ளவாறு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த 16 ஆண்டுகாலமாக ஊதிய முரண்பாட்டில் மிகப்பெரும் ஊதிய இழைப்பைச் சந்தித்துள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். 

                    அதேபோன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்காலம் முதல் கடந்த 55 ஆண்டுகாலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக வழங்கும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

                    மேலும், தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் வகையிலும், தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் முன்னுரிமையை மாற்றியமைத்தும்நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஊட்டுப் பதவிகளை மாற்றி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம் செய்தும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 243 நாள்: 23.12.2023ஐ ரத்து செய்திடக்கோரி ஒட்டுமொத்தமாக தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. அந்த அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

                     தொடக்கக்கல்வித்துறையில் ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர்களில் ரூ.5400 தர ஊதியம் பெற்றவர்களுக்கு விதிகளுக்குப் புறம்பாக அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ள தணிக்கைத் தடையால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியாமல் உள்ளனர். இதுபோன்ற இன்னும் பல தவறான தணிக்கைத் தடைகளால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சனையை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தீர்க்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளின் மீதும் தமிழ்நாடு அரசு சாதகமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459