எம்பிஏ உட்பட மேலாண்மை படிப்புகளுக்கான `சிமேட்' நுழைவு தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர `சிமேட்' எனப்படும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் இணையவழியில் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு கடந்த ஜன.25-ம் தேதி நாடு முழுவதும் 178 மையங்களில் நடைபெற்றது. பதிவு செய்திருந்த 74,012 பேர் 63,145 (85.3%) பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.
இந்த தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் /exams.nta.ac.in/CMAT/ என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
கூடுதல் விவரங்களை nta.ac.in எனும் வலைதளத்தில் அறியலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சிமேட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment