பொதுமாறுதல் கலந்தாய்வு - ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் - ஆசிரியர் மலர்

Latest

26/05/2023

பொதுமாறுதல் கலந்தாய்வு - ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

996397


மதுரையில் நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடங்களை மூடி மறைத்தும், சர்வர் பிரச்சினை என மாலை 6 மணிக்கு மேலும் காலதாமதம் செய்து கலந்தாய்வு நடத்தப்பட்டதாக, ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Join Telegram


தமிழகம் முழுவதும் நேற்று அரசு உயர்நிலை, மேல்நிலப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆசிரியருக்கு 34 காலிப்பணியிடங்களுக்கு 364 ஆசிியர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.


காலையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மதியம் 1 மணி என காலதாமதம் செய்தனர். மாலை 6 மணிக்கு மேலாகியும் கலந்தாய்வு நடக்கவில்லை. சர்வர் பிரச்சினையில் கலந்தாய்வு தொடங்கவில்லை என தெரிவித்தனர். மேலும், மதியத்திற்கு மேல் 34 காலிப்பணியிடங்களில் 4 பணியிடங்களை மறைத்ததாகவும் சொல்லப்படுகிறது. 


இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 34 காலிப்பணியிடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டும், காலதாமதமின்றி வெளிப்படையாக கலந்தாய்வை நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் இரவு 7 மணிக்குமேல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


இதில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் வி.கணேசன் கூறுகையில், "மதுரை மாவட்ட எல்லைப்பகுதியிலுள்ள பள்ளிகளில் 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றும் ஆசிரியர்கள் மதுரை நகரை ஒட்டிய பள்ளிகளிலும் பணியாற்ற வேண்டும் என விரும்பி கலந்தாய்வில் கலந்துகொண்டனர். 


அறிவிக்கப்பட்ட 34 காலிப்பணியிடங்களில் 4 இடங்கள் மூடி மறைக்கப்பட்டன. மேலும் சர்வர் பிரச்சினை என மாலை 6 மணிக்குமேலாகியும் கலந்தாய்வை நடத்தவில்லை. இதனால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபின்னர் சர்வர் பழுது சரியாகிவிட்டதென கலந்தாய்வில் பங்கேற்க அழைத்துள்ளனர். மேலும், வெளிப்படையாகவும், பாரபட்சமின்றி கலந்தாய்வு நடத்த வேண்டும். இரவில் கலந்தாய்வு நடத்துவதால் வெளியூரிலிருந்து குழந்தைகளுடன் வந்த ஆசிரியர்கள் சிரமப்பட்டனர்" என்றார்.


TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459