அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழு கூட்டம்: வழிமுறைகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

10/04/2023

அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழு கூட்டம்: வழிமுறைகள் வெளியீடு

 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிவதற்காக சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஏப்ரல் 10, 24-ம் தேதிகளில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.


அதன்படி அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 10) மாலை 3 முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிதல், துணைத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதித்து அடுத்தகட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இதுதவிர பள்ளி வளர்ச்சி பணிகள், இல்லம் தேடிக் கல்வி உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.


இந்த கூட்டத்தில் எஸ்எம்சி குழுவில் உள்ள ஆசிரியர், சமூக ஆர்வலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் அவசியம் பங்கேற்க வேண்டும். இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


அரசின் வழிகாட்டுதல்களின்படி எஸ்எம்சி குழு கூட்ட விவரங்களை தொகுத்து அறிக்கையாக தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459