மாவட்டத்திற்கு இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள் - ஆசிரியர் மலர்

Latest

01/04/2023

மாவட்டத்திற்கு இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள்

 ''ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்,'' என, சட்டசபையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.


அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:


தமிழகத்தில், 2,996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 175 கோடி ரூபாய் மதிப்பில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.


இரண்டாம் கட்டமாக, 7,500 அரசு துவக்கப் பள்ளிகளில், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்


அரசு பள்ளி மாணவர்களின் படிக்கும் பழக்கத்தை, மேலும் ஊக்குவிக்கும் வகையில், மாபெரும் வாசிப்பு இயக்கம், 10 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்


ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள், 9 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும்.


வெளிமாநில தொழிலாளரின் குழந்தைகள், தாய் மொழியுடன் தமிழ் மொழி பேசவும், எழுதவும், 'தமிழ் மொழி கற்போம்' என்ற திட்டம் துவங்கப்படும்


சிறைகளில் உள்ள எழுத, படிக்க தெரியாத 1,249 கைதிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்படும்


நாட்டுடைமை ஆக்கப்பட்ட அரிய நுால்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, தமிழக பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படும். உலக புகழ் பெற்ற இலக்கியங்கள், குழந்தைகளுக்கான நுால்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும்


இளைஞர் இலக்கிய திருவிழா, 30 லட்சம் ரூபாய்மதிப்பில் நடத்தப்படும். சென்னை கன்னிமாரா நுாலகத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு பிரிவுகள் துவங்கப்படும்


அனைத்து மாவட்ட மைய நுாலகங்கள் மற்றும் முழு நேர கிளை நுாலகங்கள், ஆண்டுதோறும் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வாசகர்களுக்கான வசதிகளுடன் படிப்படியாக மறுசீரமைப்பு செய்யப்படும்.


இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459