CPS ரத்து, NEP 2020 ரத்து ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கிப் பேரணி - ஆசிரியர் மலர்

Latest

18/12/2022

CPS ரத்து, NEP 2020 ரத்து ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கிப் பேரணி


 டகச் செய்தி

மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 20/2022  நாள்: 18.12.2022

CPS ரத்து, NEP 2020 ரத்து ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி
2023 பிப்ரவரி 20ல் பாராளுமன்றம் நோக்கிப் பேரணி
1000 ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு.

                                     தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ திரும்பப் பெறுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் புதுதில்லியில் பாராளுமன்றம் நோக்கி நடைபெறும் பேரணியில் ஆயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்வதென திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது.

                                    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (18.12.2022) திருப்பூர் வாலிபாளையம் சேம்பர் ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். STFI அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண்கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்டச் செயலாளர் அ.பிரபு செபாஸ்டியன் வரவேற்புரை ஆற்றினார். வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு அளித்தார். சங்கத்தின் வேலை அறிக்கையை சமர்ப்பித்த பொதுச்செயலாளர் ச.மயில் கூட்டப் பொருள்களின் மீதான விவாதத்தை தொடக்கி வைத்துப் பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.

                                    கூட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 2023 பிப்ரவரி 20 அன்று பட்ஜெட் கூட்டத் தொடரின் போது புதுதில்லியில் நாடு முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களைத் திரட்டி பாராளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்திட அகில இந்திய அமைப்பான இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) முடிவு செய்துள்ளது. இப்பேரணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 1000 ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்வதென மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

                                    மேலும், தமிழ்நாடு முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் வழங்கப்பட்டு வரும் முறைகேடான, விதிகளுக்குப் புறம்பான நிர்வாக மாறுதல்களை உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு நிறுத்திட வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல்களை ரத்து செய்துவிட்டு, இக்கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தி தகுதியுள்ளோருக்கு பணிமாறுதல் வழங்கிட வேண்டும். பணி நிரவலில் வேறு ஒன்றியங்களுக்குப் பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை விதிகளின்படி சொந்த ஒன்றியத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு உடனடியாகப் பணிமாறுதல் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சங்கத்தின் சார்பில் சுவரொட்டி இயக்கம் நடத்திடவும் மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது.

                                   மேலும், தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், முன்பு வழங்கப்பட்டது போல் ஆசிரியர்கள் பெறும் உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 01.07.2022 முதல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன எனத் தெரிவித்தார்.

                                   இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.                             

இப்படிக்கு,
ச.மயில்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459