பள்ளிகளில் தொழிற்கல்வி ரத்து: விளக்கம் கேட்கிறது அரசு - ஆசிரியர் மலர்

Latest

03/09/2022

பள்ளிகளில் தொழிற்கல்வி ரத்து: விளக்கம் கேட்கிறது அரசு

 தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகளை அடியோடு மூட, பள்ளிக் கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


முதல்கட்டமாக, தற்காலிக ஆசிரியர் உள்ள பள்ளிகள், ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் ஆகியவற்றில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடவும், அதில் சேர்க்கப்பட்ட பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும், பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதை பின்பற்றி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கிஉள்ளனர்.


தென்காசி மாவட்ட சி.இ.ஓ., சார்பில், தலைமை ஆசிரியர்களுக்கு எழுத்துப்பூர்வமான உத்தரவு அனுப்பப்பட்டு, ஒன்பது பள்ளிகளில் பாடப்பிரிவுகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல்லில் 18 பள்ளிகளில் பாடப்பிரிவுகள் மூடப்பட்டு, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, அரசு உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விசாரணையை துவங்கினர்.

இந்த விவகாரம் குறித்து, உரிய விபரங்களை அரசுக்கு தாக்கல் செய்யுமாறும்,பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம் அளிக்குமாறும், பள்ளிக் கல்வி துறை செயலர் மற்றும் முதல்வர் அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதற்கிடையில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடும் முடிவை கைவிடுமாறு, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் அக்ரி மாதவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:

 தொழிற்கல்வியில் பிளஸ் 1 சேர்ந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி, வேறு பாடப்பிரிவுக்கு மாற்றுவது மிகவும் வருந்தத்தக்க செயல். ஆசிரியர் காலியிடம் இருந்தால், அதை நிரப்பி பாடங்கள் நடத்த வேண்டுமே தவிர, அதற்காக மாணவர்களை வெளியேற்றிவிட்டு, தொழிற்கல்வி பிரிவையே மூடுவது, மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459