பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்த்தவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி - ஆசிரியர் மலர்

Latest

20/09/2022

பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்த்தவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி

 channel



பள்ளிகளில் மாணவர்கள் இடையே சாதி பாகுபாடு பார்த்தவர்கள் மீது கடுமையான நடவடிகை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: ஒரு பள்ளியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களை தரையில் உட்காரச் சொன்னதாக ஒரு பிரச்னை எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும் விசாரணை நடத்தியுள்ளார். இந்த பிரச்னை மிகவும் உணர்வுப் பூர்வமான விஷயம். இதில் அவசரப்பட்டு எந்த நடவடிக்கை எடுப்பதைக் காட்டிலும் அதை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.


இதில் யார் தவறு செய்திருந்தாலும், தரையில் உட்கார வைப்பது என்பதை விட சமமாக உட்கார வைக்க வேண்டும் என்பதுதான் காமராஜர் காலத்தில் இருந்து நடந்து வருகிறது. ஆனால், இன்றைக்கும் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தது என்றால் அதற்கு காரணம் யார் என்று பார்த்து அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். காலாண்டுத் தேர்வுகளை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த முறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் துறை மூலம் அந்தந்த மாவட்டத்தில் கேள்வித்தாள் தயாரிக்கும் முறை கொண்டு  வரப்பட்டுள்ளது.


பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும் மாநிலம் முழுவதும் ஒரே கேள்வி முறை இருக்கிறது. நிர்வாக காரணங்களுக்காக அந்தந்த மாவட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்துவது என்பது , பள்ளிக் கல்வி நடைமுறை இல்லை. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ரிசல்ட் காட்ட வேண்டும் என்று கேட்டதால் அது அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத்துறை மருத்துவர்கள் கலந்து பேசி அவர்கள் அறிவிக்கும் போது நாங்கள்அதை பள்ளிகளுக்கு தெரிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459