இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் - WHO - ஆசிரியர் மலர்

Latest

07/07/2022

இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் - WHO

இந்தியாவில் புதிதாக BA.2.75 என்ற புதிய வகை ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் BA.4, BA.5 வகை தொற்று பரவிவரும் வகையில், இந்தியா போன்ற நாடுகளில் அதன் துணை வகைகளான BA.2.75 தொற்று பரவியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த புதியவகை தொற்று முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது சுமார் 10க்கும் நாடுகளில் அது பரவியுள்ளது.


உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு வாரங்களில் மட்டும் புதிய தொற்று எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் ஆறு கண்டங்களில் நான்கு கண்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. இந்தியா போலவே, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.



BA.2.75-ஐ பொறுத்தவரை இது வரவிருக்கும் போக்கை குறிக்கலாம் என்பதால் இதை ஒரு தீவிர சப்-வேரியன்ட்டாக மாறக்கூடும் என்ற கவலை நிபுணர்களிடையே உள்ளது. ஏனென்றால் சமீப மாதங்களில், ஸ்பைக் புரதத்தின் S1 பிரிவில் உள்ள பிறழ்வுகளுடன், BA.1, BA.2, BA.3, BA.4, BA.5 போன்ற ஒமைக்ரான் துணைப் பரம்பரைகளை அடிப்படையாக கொண்ட இரண்டாம் தலைமுறை வேரியன்ட்களின் பரவல் அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் உயிரணுக்களுடன் இணைய மற்றும் உள்நுழைய வைரஸ் பயன்படுத்தும் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியில் குறிப்பாக பிறழ்வுகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. BA.2.75 இப்போது தீவிர பாதிப்புகளுக்கு காரணமாகாவிட்டாலும் காலப்போக்கில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459