டிட்டோஜேக் பேரமைப்பு சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தும் 18 கோரிக்கைத் தீர்மானங்கள் - ஆசிரியர் மலர்

Latest

28/07/2022

டிட்டோஜேக் பேரமைப்பு சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தும் 18 கோரிக்கைத் தீர்மானங்கள்

டிட்டோஜேக் பேரமைப்பு சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தும் கோரிக்கைத் தீர்மானங்கள் 

1 ) தொடக்கக் கல்வித் துறையினை பள்ளிக் கல்வித் துறையோடு இணைத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரசாணை 101,108 ஐ உடனடியாக இரத்து செய்யப்பட்டு தலைவர் கலைஞர் கால நிர்வாக கட்டமைப்பு தொடர்ந்திட வேண்டும்.



2 ) பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடத்தை இரத்து செய்து , பதவி உயர்வு வழி பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடரச் செய்திட வேண்டும்.



3 ) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முற்றிலும் இரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.



4 ) இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு முற்றிலும் களையப்பட வேண்டும்.



5 ) ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்திட அனுமதிக்க வேண்டும்.



6 ) மத்திய அரசு அறிவித்த நாள்முதல் அகவிலைப்படி உயர்வினை உடன் வழங்க வேண்டும்.



7 ) பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு 10.03.2020 முதல் நிறுத்தப்பட்டு ஊக்கத் தொகையாக வழங்கப்படுவதை மாற்றி அமைத்து பழைய முறையில் ஊக்க ஊதியமாகவே தொடர்ந்திட ஆணை வழங்க வேண்டும் . 10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி முடித்தோரின் ஊக்க ஊதிய உயர்வு உடன் வழங்கப்பட வேண்டும்.



8 ) 2003-2004 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்கள் தொகுப்பூதியப் பணிக்காலத்தை காலமுறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.



9 ) மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் காலத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமாய் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.



10 ) EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியிலிருந்து ஆசிரியர்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும் . இணையதளம் மூலம் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யும் பணியினை உடனடியாக நிறுத்த வேண்டும் . ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும்.



11 ) தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டாக்டர் கலைஞர் அவர்கள் பி.லிட் , தமிழ் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்க ஆணையிட்டார் . அதன்படி பதவி உயர்வு பெற்றவர்கள் பி.எட் . , பட்டம் பெற்றமைக்காக வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு தணிக்கைத் தடை என்ற பெயரால் தடுத்து நிறுத்தப்படுகிறது . தடையினை நீக்கிட ஆணை வழங்க வேண்டும்.



12 ) உயர்கல்வி படித்து பின்னேற்பு அனுமதிக்காக காத்திருக்கும் 6,500 ஆசிரியர்களுக்கு உரிய பின்னேற்பு ஆணை வழங்க வேண்டும்.



13 ) இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் , அவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை உருவாக்கி அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கி பணியமர்த்திட வேண்டும்.



14 ) நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் நிலை இறக்கம் செய்யப்பட்ட 95 துவக்கப்பள்ளிகளுக்கும் புதிதாக துவக்கப்பட்ட 20 துவக்கப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது . உடன் பணியிடம் தோற்றுவித்து ஆணை வழங்கிட வேண்டும்.



15 ) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் நியமனத் தேர்வு வைக்கும் அரசாணை 149 இரத்து செய்திட வேண்டும் . தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறை கைவிடப்பட வேண்டும் . தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நிரந்தர ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டும்.



16 ) “ எண்ணும் , எழுத்தும் ” திட்டத்தை தனியார் ஆய்வு செய்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.



17 ) பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு என்ற பெயரில் பள்ளியினைக் கண்காணிக்கும் நடைமுறைகளால் கற்றல் , கற்பித்தல் பணியில் ஏற்படும் பாதிப்பினைக் கருத்தில் கொண்டு அத்தகைய நடைமுறைகளைக் கைவிட வேண்டும்.



18 ) 2022 ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வுகளுக்குத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்து உடன் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும் . காலியிடங்களுக்கு 2022 செப்டம்பர் மாதத்திற்குள் மீண்டும் மாறுதல் வாய்ப்பளித்திட வேண்டும் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459