தேசிய கல்விக் கொள்கை இடை நிற்றலை அதிகரிக்கும் : தமிழக அரசு - ஆசிரியர் மலர்

Latest

21/06/2022

தேசிய கல்விக் கொள்கை இடை நிற்றலை அதிகரிக்கும் : தமிழக அரசு

 சென்னை, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர், உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- கல்வி என்பது மாநில கொள்கை எனவும், தேசிய கல்விக் கொள்கை என்பது எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லாத வரைவு கொள்கையாக உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசு வேலையில் தமிழில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து சமத்துவமான கல்வி என்ற அடித்தளத்தைக் கொண்டுள்ள மதச்சார்பற்ற தமிழ்நாட்டில், இரு மொழிக் கொள்கையும், தாய்மொழியில் அடிப்படைக் கல்வியும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 27.1 சதவீதத்திலிருந்து 2035-ல் 50 சதவீதமாக உயர்த்தும் எண்ணத்தில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டதாகக் கூறும் நிலையில், இலவச கல்வி, மதிய உணவு, இலவச புத்தகம், சீருடை, சைக்கிள், காலணி, லேப் டாப், உதவித்தொகை மூலம் 51.4 சதவீத சேர்க்கை விகிதத்தை எட்டி, தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிப்பதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தற்போதைய கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தேசிய கல்விக் கொள்கை இடை நிற்றலை அதிகரிக்கும். மேலும், தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய சூழல், எதிர்கால விருப்பங்களைக் கருத்தில் கொண்டு, மாநில கல்விக் கொள்கையை வகுக்க ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459