பள்ளிகளில் ஒரு வாரம் துாய்மை பணிகலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம் - ஆசிரியர் மலர்

Latest

10/06/2022

பள்ளிகளில் ஒரு வாரம் துாய்மை பணிகலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்

'ஒரு வாரம் முழுதும் துாய்மை பணிகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளையும் ஊக்குவிக்க வேண்டும்' என, தலைமை செயலர் இறையன்பு கூறியுள்ளார்.
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பிஉள்ள கடிதம்:கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளிகளும், மாணவர்களை வரவேற்க, துாய்மை துலங்கும் இடமாக இருக்க வேண்டும்.

துாய்மை பள்ளிகள் இயக்கம் என்ற முயற்சியை மேற்கொண்டு, பள்ளியை அழகு மிகுந்த இடமாக மாற்ற வேண்டும்.துாய்மையான இடத்தில் பயிலும் ஆர்வமும் அதிகரிக்கும். கல்வி கற்று கொடுக்கும் இடம் கண்களில் ஒற்றி கொள்ளும் அளவுக்கு கவித்துவம் பெற்று விளங்க உழைப்போம்.

பரிசுகள்

ஒரு வாரம் முழுதும் துாய்மை பணிகளை மேற்கொள்ள, அனைத்து பள்ளிகளையும் ஊக்குவிக்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளையும் துாய்மைப்படுத்த வேண்டும்.பல தலைமை ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், சேவை அமைப்புகளையும் பயன்படுத்தி, பள்ளிகளை பாங்குடன் பராமரிப்பதை பார்த்திருக்கிறேன்.

பள்ளியை சொந்த இல்லம் போல பாவித்து பராமரிக்கும் ஆசிரியர்களுக்கு, மாவட்டம் தோறும் பரிசுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.கழிப்பறைகளின் கதவுகளை சரிசெய்தும், செம்மைப்படுத்துவதும் முக்கியம்; துர்நாற்றம் வீசாமல் துாய்மையுடன் இருக்கும்படி செய்ய வேண்டும். விளையாட்டு திடலின் பள்ளங்களை சமப்படுத்தி, மாணவர்கள் துள்ளி விளையாடும் இடமாக மாற்ற வேண்டும்.குடிநீர் பாதுகாக்கப்படும் கலன்களை துாய்மைப்படுத்தி வைக்க வேண்டும்.

சத்துணவு கூடம்

பெற்றோர் - -ஆசிரியர் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பை பெற்று, பள்ளிகளில் இன்னும் சில அத்தியாவசிய பணிகளை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும். சத்துணவு சமைக்கும் கூடத்தை வெள்ளை அடித்து, அடுப்புகளை சீரமைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459