பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறையக் கூடாது!விடை திருத்த ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

02/06/2022

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறையக் கூடாது!விடை திருத்த ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை

பிளஸ் 2 மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ள நிலையில், தேர்ச்சி சதவீதம் கடந்த ஆட்சியை விட குறையாமல் பார்த்துக் கொள்ள, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப் பட்டது. பிளஸ் 2வுக்கு மே 23; 10ம் வகுப்புக்கு, மே 30 மற்றும் பிளஸ் 1க்கு மே 31ல் பொது தேர்வுகள் முடிந்தன.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நேற்று துவங்கியது. மாநிலம் முழுதும் 80 மையங்களில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 30 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



சோதனை

முதல் நாளான நேற்று தலைமை விடைத்தாள் திருத்துனர் என்ற, சி.இ.,க்கள் விடைத்தாள் களை திருத்தினர். அப்போது, விடைக் குறிப்புகளில் தவறுகள் உள்ளதா, தினமும் ஒரு ஆசிரியர், 24 விடைத்தாள்களை திருத்த போதுமான நேரம் உள்ளதா என, சோதனை செய்யப் பட்டது.

இன்று முதல் உதவி விடை திருத்துனர் என்ற ஏ.இ.,க்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட உள்ளனர். மதிப்பெண் வழங்குவதை பொறுத்தவரை, மிகவும் கண்டிப்புடன் இல்லாமல், நடுநிலையாக செயல்பட அறிவுறுத்தப் பட்டுள்ளது.பாடங்களை புரிந்து படித்து பதில் எழுதினாலும், அவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. வரும் காலங்களில் பாடங்களை புரிந்து படிக்கும் மாணவர்கள் மட்டுமே, உயர்கல்வியை தொடரவும், நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறவும் முடியும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



அறிவுறுத்தல்

தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் நடத்தப்பட்ட முதல் பொது தேர்வு என்பதால், கடந்த ஆட்சியை விட தேர்ச்சி குறையாமல் பார்த்து கொள்ளுமாறு, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த 'ரிசல்ட்'டை எதிர்க்கட்சிகள் விமர்சிக்காமல் தடுக்கும் வகையில், முன் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459