கல்வி கட்டணம் ரத்து: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்! - ஆசிரியர் மலர்

Latest

26/04/2022

கல்வி கட்டணம் ரத்து: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

பட்ஜெட்டில் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது
அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 - 23 ஆம் கல்வி ஆண்டில் இருந்து 200 ரூபாய் தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேக்ஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அந்தத் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டம். முதல் முறையாக கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் நலன் கருதி பல திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 - 23 ஆம் கல்வி ஆண்டில் இருந்து 200 ரூபாய் தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும்.

கொரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கவே இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் முன்னோடி திட்டமாக இது செயல்படுகிறது. 4 ஆண்டுகளில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 6,029 அரசுப் பள்ளிகளில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.


2,713 நடுநிலைப் பள்ளிகளில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். ஆசிரியர் பணியிட மாறுதல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மாடல் பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பு அறைகள் அமைக்கப்படும். மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது தான் திராவிட மாடல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை.

அரசுப் பள்ளிகளில் 25 லட்சம் ரூபாய் செலவில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும். சதுரங்க போட்டி குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459