கல்வி தொலைக்காட்சியின் மூலம் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு: தமிழக அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

21/03/2022

கல்வி தொலைக்காட்சியின் மூலம் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு: தமிழக அரசு அறிவிப்பு

கல்வித் தொலைக்காட்சியின் மூலம், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட அறிக்கை: கல்வித் தொலைக்காட்சி மூலம் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வழங்குவது குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார். இதற்கான அரசாணைகள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கடந்த ஜனவரி 7ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியில் துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் இளைஞர்கள் அரசுத்துறை பணியினைப் பெற மேலும் சிறப்பாகவும் எளிய வழிமுறையிலும் அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கையாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறையுடன் இணைந்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியின் மூலம் நேற்று முதல் தொடர்ந்து ஒளிப்பரப்பப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கி தேர்வாணையம், ஒன்றியத்தின் பணியாளர் தேர்வாணையம் போன்ற பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்குத் தேவையான கட்டணமில்லா பயிற்சியுடன் ஊக்கப்படுத்தும் உரைகள், ஆளுமை வளர்ச்சி, நேர்முக தேர்வுக்காக தயார் செய்தல், கலந்துரையாடல்கள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாளினை கூர்ந்து ஆய்வு செய்தல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மீண்டும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படும். பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகமாக வெற்றி பெற இம்முயற்சி வழிவகுக்கும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459