கொட்டித் தீர்க்கப் போகிறது மழை: தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் - ஆசிரியர் மலர்

Latest

01/03/2022

கொட்டித் தீர்க்கப் போகிறது மழை: தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட்

 'வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், வரும், 3, 4ம் தேதிகளில், தமிழகத்தில் மிக கன மழை பெய்யும்' என, வானிலை மையம், 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்து உள்ளது.
 சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு: தென் கிழக்கு வங்க கடல் பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.இதனால், தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை மிதமான மழை பெய்யும்.



நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், மிக கன மழை பெய்யும்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், கன மழை பெய்யும்.

 வரும், 4ம் தேதி கடலுார்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில், கன மழை பெய்யும்.



சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.வங்க கடலின் தென்கிழக்கு, அந்தமான் பகுதிகளில் இன்று; தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் நாளை மழை பெய்யும்.



தென் மேற்கு, மன்னார் வளைகுடா மற்றும் தமிழககடலோர பகுதிகளில் வரும், 3ம் தேதி; தென் மேற்கு, தமிழக வடக்கு கடலோரம் மற்றும் ஆந்திராவின் தென்கடலோர பகுதிகளில் வரும், 4ம் தேதி மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இந்த நாட்களில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459