தமிழகத்தில் 31,214 பள்ளிகளுக்கு 2ம் கட்டமாக ரூ.3,895.15 லட்சம் மானிய தொகை விடுவிப்பு: மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.! - ஆசிரியர் மலர்

Latest

08/03/2022

தமிழகத்தில் 31,214 பள்ளிகளுக்கு 2ம் கட்டமாக ரூ.3,895.15 லட்சம் மானிய தொகை விடுவிப்பு: மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.!

மாநிலம் முழுவதும் உள்ள 31,214 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு 2வது கட்ட மானிய தொகையான ரூ.3,895.15 லட்சம் நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு தொடக்க நிலை, நடுநிலை நகராட்சி, மாநகராட்சி, நலத்துறை பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கும், மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கும், பள்ளி வசதிகளை பராமரிப்பதற்கும் நிதி ஆதாரமாக ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மானியம் வழங்கப்படுகிறது.


அதன்படி ஒன்றிய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2021-22ம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக 2019-20ம் ஆண்டில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 31,214 அனைத்து அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலை நகராட்சி, மாநகராட்சி, நலத்துறைப் பள்ளிகளுக்கு ரூ.7,790.3 லட்சம் பள்ளி மானியமாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கெனவே , அனுமதிக்கப்பட்டுள்ள தொகையில் 50 சதவீதம் முதல் தவணையாக கடந்த 22.10.2021 அன்று அனைத்து அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலை நகராட்சி, மாநகராட்சி, நலத்துறைப் பள்ளிகளுக்கும் ₹3895.15 லட்சம் மாவட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக 50 சதவீதம் மீதமுள்ள தொகையான ரூ.3895.15 லட்சம் மாவட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது. கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை களைய இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடுவிக்கப்படும் நிதியில் 25 சதவீதத்தை அந்தந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர குறைதீர் கற்றல் நடைபெறும் பயன்படுத்த தேவையான எழுதுபொருட்கள் வழங்கிட வேண்டும். பள்ளிகளுக்கு உடனடியாக நிதியினை விடுவிக்கவும் மேற்காண் வழிகாட்டுதலுடன் ஏற்கெனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.  

நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமைக்கு எமிஸ் இணையதள பதிவுகளை மேற்கொள்ள அனைத்து அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலை நகராட்சி, மாநகராட்சி, நலத்துறைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் தினமும் பிற்பகல் 2.00 மணிக்குள் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் செலவினம் மேற்கொள்வதை உறுதி செய்து செலவின விவரத்தை பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மானியத் தொகை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் பெற்று, மாவட்ட அளவில் தொகுத்து மாவட்டத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழை மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு வரும் 4ம் தேதிக்குள் தவறாது அனுப்பி வைக்க அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459