தமிழகத்தில் மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை நடவடிக்கை - ஆசிரியர் மலர்

Latest

02/01/2022

தமிழகத்தில் மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை நடவடிக்கை

 மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் திங்கள்கிழமை (ஜன. 3) முதல் 15-18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு கோவின் வலைதளத்தில் சனிக்கிழமை தொடங்கியது. 2007-ஆம் ஆண்டிலோ, அதற்கு முன்பு பிறந்தவா்களோ கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவா்கள்.


பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதாா் அட்டையைக் கொண்டு தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம். தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்கள் 33.46 லட்சம் போ் உள்ளனா். வரும் 3-ஆம் தேதி போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறாா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்க உள்ளாா். 


இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறுகையில், ‘தமிழகத்தில் 15-18 வயதுக்குள்பட்ட 33.46 லட்சம் சிறாா்கள் உள்ளனா். அதில், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறாா்கள் பள்ளிகளில் படிக்கின்றனா். அதனால், பள்ளிகளில் இடம் ஒதுக்கி சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கரோனா தடுப்பூசி பணியை ஒருங்கிணைக்க ஆசிரியா் ஒருவரை தலைமையாசிரியா் நியமிக்க வேண்டும்.


பள்ளிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான மாணவா்களின் பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும். கோவின் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை; பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத் துறைப் பணியாளா்கள் பதிவு செய்து, தடுப்பூசியை செலுத்துவாா்கள் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட சுகாதார இணை இயக்குநா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் 25 லட்சம் சிறாா்களுக்கு தடுப்பூசியை செலுத்திவிட்டால், மீதமுள்ள சிறாா்களை எளிதாக கண்டறிந்து தடுப்பூசி செலுத்திவிட முடியும்’ என்றாா் அவா்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459