தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் - ஆசிரியர்கள் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

05/12/2021

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் - ஆசிரியர்கள் கோரிக்கை

 அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில், தாமதமின்றி தங்களுக்கு பதவி உயர்வு வழங்குமாறு, முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகத்தில் உள்ள 59 ஆயிரம் பள்ளிகளில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள்; இவற்றில், 7,400 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்று செல்வர். அதனால் ஏற்படும் காலியிடங்களில், முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.


இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்காததால், அதை எதிர்பார்த்துள்ள முதுநிலை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 700 மேல்நிலைப் பள்ளிகள்; 300 உயர்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பதவிக்கான நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளன.


இந்த இடங்களில் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என, பணி மூப்பு பட்டியலில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர்களில் சிலர் ஓய்வு வயதையும் நெருங்குவதால், பதவி உயர்வு பெற்று சம்பள உயர்வுடன் ஓய்வு பெறலாம் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.


இதற்கிடையில், தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள் பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களில் சிலர், தலைமை ஆசிரியர்களுக்கான நிர்வாக பணியை மட்டும் பார்ப்பதால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பாட வகுப்புகளை எடுப்பதில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டுள்ளது.


எனவே, இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தாமதமாகும் பதவி உயர்வு நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459