கல்வி சான்றிதழ்களுக்கு 18% ஜிஎஸ்டி: யார் யாருக்கு பொருந்தும்? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம். - ஆசிரியர் மலர்

Latest

26/11/2021

கல்வி சான்றிதழ்களுக்கு 18% ஜிஎஸ்டி: யார் யாருக்கு பொருந்தும்? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்.


கல்விச் சான்றிதழ்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கமளித்துள்ளார்.
 
அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் இணைப்பு கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளதாகவும், அதில் சான்றிதழுகளுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும், இதற்கான புதிதாக ஒரு ஜிஎஸ்டி பதிவு எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

 இந்நிலையில் கல்விச் சான்றிதழ்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் , 'புதிய தலைமுறை'க்கு விளக்கமளித்துள்ளார். அதில் அவர், ''அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் கல்வி ஆண்டு பயிலும் நேரத்தில் எந்த ஜி.எஸ்.டி யும் இல்லை. மாணவர்களாக கல்வி ஆண்டு முடித்து வெளியே சென்ற பிறகு சில சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். அதுவும் இடமாற்றம் சான்றிதழ், நகல் சான்றிதழ், வேலைக்கு செல்ல சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே 18 சதவீதம் ஜி.எஸ்.டி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது ஒராண்டுக்கு தோராயமாக 20 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்கின்றனர். அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். பெரும்பாலும் நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பம் செய்வது, வெளிநாட்டில் பணிக்கு செல்பவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் இணையதளத்திலும் இந்த தகவல் முறையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி ஆண்டில் பயிலும் எந்த மாணவர்களுக்கும் இதில் பாதிப்பு இருக்காது. 4 ஆண்டுகள் ஜி.எஸ்.டி வசூலிக்காததால் பல்கலைக்கழகத்திற்கும் சிரமம் ஏற்பட்டது'' என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459