அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து – - ஆசிரியர் மலர்

Latest

07/10/2021

அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து –

 


தமிழக அரசு அளித்துள்ள 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் பொறியியல் கல்லூரிகள் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அங்கீகாரம் ரத்து:


தமிழகத்தில் முன்னதாக மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதி கல்லூரிகளில் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது.

 

இது தொடர்பாக அரசு ஆணையம் ஒன்றை நியமித்து, குழு அளித்த அறிக்கையின் இறுதி முடிவுகளின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தது. மேலும், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நடப்பு ஆண்டில் அரசின் 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.


இந்நிலையில், தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை கட்டணம் செலுத்த வலியுறுத்துவதாக வந்த புகார்களின் அடிப்படியில் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் AICTE வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டணம் வசூலித்திருந்தால், அவற்றை மாணவர்களிடம் உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் எனவும் பொறியியல் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459