சம்பள பட்டியல் இணையதளம் முடக்கம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திணறல்! - ஆசிரியர் மலர்

Latest

29/08/2021

சம்பள பட்டியல் இணையதளம் முடக்கம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திணறல்!

 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பட்டியல் தாக்கல் செய்வதற்கான இணையதளம் முடங்கி உள்ளதால், ஊழியர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் இதர பண பலன் பட்டியல், கருவூலத்துறையில் நேரடியாக வழங்கப்படாமல், நிதித்துறை அறிமுகம் செய்துள்ள இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.அந்த பட்டியலுக்கு, உயர் அதிகாரிகள் அனுமதி அளித்த பின், கருவூலத்தில் இருந்து, ஊழியர்களின் வங்கி கணக்குக்கு, ஆன்லைனில் சம்பளம் வரவு வைக்கப்படும்.


இந்த இணையதளம், அ.தி.மு.க., ஆட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்டு, அதன் வேகம் மிகவும் குறைவாக இருந்து வந்தது.சம்பள பட்டியலை பதிவு செய்ய, ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் வரை, ஊழியர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இந்த இணையதளம் சரியாகும் என, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, இணையதள 'மக்கர்' பிரச்னை இன்னும் அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாத சம்பளத்துக்காக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், நான்கு நாட்களாக இணையதளத்தில் தகவல்களை பதிவேற்ற முயற்சித்து வருகின்றனர்.'சர்வர்' சரியாக செயல்படாததால், இணையதளத்தின் ஒவ்வொரு பக்கமும் பதிவாக பல மணி நேரமும் ஆவதால், சம்பள பட்டியலை பதிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459