பொடுகு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாட்டி வைத்தியம் - ஆசிரியர் மலர்

Latest

26/07/2021

பொடுகு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாட்டி வைத்தியம்




தலைச் சருமத்தில் அதிகப்படியான வறட்சியினால் இறந்த சரும செல்கள் செதில்செதிலாக வருவது தான் பொடுகு. இந்த பொடுகு வந்தால், தலையில் அரிப்பு அதிகம் ஏற்படுவதோடு, வெள்ளையாக தூசி படிந்திருப்பது போன்று அசிங்கமாக காணப்படும். மேலும் பொடுகு தலையில் அதிகம் இருந்தால், மயிர்கால்கள் வலிமையிழந்து, உதிர ஆரம்பிக்கும். இது அப்படியே நீடித்தால், பொடுகானது புருவங்கள், மூக்கின் பக்கவாட்டுப் பகுதிகள் மற்றும் காதுகளுக்கு பின்புறங்களைத் தாங்கி, அவ்விடங்களில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தி அழகையே கெடுத்துவிடும்.


பலரும் பொடுகைப் போக்க வழி தெரியாமல் தவிக்கின்றனர். அத்தகையவர்கள் கடைகளில் விற்கப்படும் கண்ட ஷாம்புக்களைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் பொடுகு சற்றும் குறையாமல் இருக்கும். ஆனால் பொடுகு பிரச்சனைக்கு நம் பாட்டி வைத்தியங்கள் நல்ல பலனைத் தரும்.


இங்கு பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலைத் தரும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.


ஆலிவ் ஆயில்


ஆலிவ் ஆயிலை சூடேற்றி, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பேபி ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், பொடுகு விரைவில் குறைந்துவிடும்.



நெல்லிக்காய் 

நெல்லிக்காயை துண்டுகளாக்கி பாலில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, பின் அதனை பாலுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும். இந்த முறையின் மூலமும் பொடுகு நீங்கும்.



உளுத்தம் பருப்பு 

உளுத்தம் பருப்பு மற்றும் கடுகை தண்ணீர் சேர்த்து அரைத்து, அந்த பேஸ்ட்டை தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து அலச பொடுகு அகலும்.



வேப்பம்பூ

வேப்பம் பூவை நல்லெண்ணெயில் போட்டு சூடேற்றி, அந்த எண்ணெயைக் கொண்டு வாரம் 2 முறை தலையை மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும்.



வெந்தயம்

இரவில் படுக்கும் போது பூந்திக்கொட்டை மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெந்தயம் ஊற வைத்த நீரால் தலைமுடியை அலசி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் பூந்திக் கொட்டையை கையால் பிசைந்து, அதனைக் கொண்டு தலைமுடியை தேய்த்து அலச வேண்டும். இப்படி 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வர பொடுகு விரைவில் போகும்


பாதாம் எண்ணெய் 

பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒரே அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.



வேப்பிலை

வேப்பிலையை ஒரு பாத்திர நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வர, அந்நீரில் உள்ள கசப்புத்தன்மையால் ஸ்கால்ப்பைத் தாக்கிய கிருமிகள் விலகி, பொடுகு நீங்கும்.



கற்றாழை 

கற்றாழை தலைக்கு குளிக்கும் முன் கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச பொடுகு பிரச்சனையில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.



எலுமிச்சை மற்றும் வினிகர்

6 ஸ்பூன் தண்ணீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 2 ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி ஸ்கால்ப்பில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்புவால் அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வர, பொடுகுத் தொல்லையின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459