சேவை மனப்பான்மையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அரசு துணை நிற்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி - ஆசிரியர் மலர்

Latest

27/06/2021

சேவை மனப்பான்மையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அரசு துணை நிற்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

 


686484

சேவை மனப்பான்மையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பள்ளிகளிடம் இருந்து அறிக்கை கோரியிருக்கிறோம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி சென்று சேரவேண்டும் என்ற அடிப்படையில், தேவைப்படும் மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கும்.


கல்விக் கட்டணத்தைச் செலுத்தாவிட்டாலும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை அனுமதிக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையையும் கேட்டுள்ளோம். அரசின் விதிமுறைகளைப் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளோம். மாணவர்களுக்காகப் பள்ளி நிர்வாகத்தையும், பள்ளி நிர்வாகங்களுக்காக மாணவர்களையும் நாங்கள் விட்டுக் கொடுப்பதாக இல்லை.


சேவை மனப்பான்மையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். அதே நேரத்தில் வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், உதாரணத்திற்குக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் அனுமதிக்கப்படாத நிலையை ஏற்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுக்கும் தொனியில்தான் செயல்படும்.

கல்விக் கட்டணம் தொடர்பாக 14417 என்ற உதவி எண் மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு வரும் புகார்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ’டேப்’ வழங்குவது குறித்த ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459