12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றால் நேரடித் தேர்வாகத்தான் இருக்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - ஆசிரியர் மலர்

Latest

04/06/2021

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றால் நேரடித் தேர்வாகத்தான் இருக்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 


கொரோனா கொடுந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கையாக பொது முடக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொது முடக்கத்தால் தொற்று சற்று குறைந்துள்ளது. ஆனால், உயிரிழப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பட்டப்படிப்பை முடிவு செய்யும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த விவாதம் எழுந்துள்ளது. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்துள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் வரவேற்றுள்ளது.இந்நிலையில், தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் (State board) கீழ் படிக்கும் 8 லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள் எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நமது திருச்சி தலைமைச் செய்தியாளர் மகேஸ்வரனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியளித்தார். அதில் அவர், ‘எப்போது வேண்டுமானாலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. ஆனால், மாணவர்களின் நலன் முக்கியம். கொரோனா கொடுந்தொற்று காலத்தில் தேர்வை நடத்துவது குறித்து பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நிபுணர்கள் என பல்வேறு தரப்பிலும் கருத்து கேட்கப்படுகின்றன.இதில் கலவையான ஆலோசனைகள் வருகின்றன. தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கருத்து கேட்கப்பட்டு இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் அளிக்க உள்ளோம். இதையடுத்து, மாணவர் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இறுதி முடிவை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்றார்.ஒரு வேளை தேர்வு நடைபெற்றால் எப்படி நடத்தப்படும் என்று கேட்டதற்கு, பிளஸ் 2 பொதுத் தேர்வை ஆன்லைனில் நடத்த சாத்தியமில்லை. தேர்வறைக்கே நேரடியாக வந்து எழுதும் வகையில்தான் இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459