64 மூலிகைகள் கொண்ட ஆயூஷ் மருந்து : ஆயூஷ் அமைச்சகம் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

04/05/2021

64 மூலிகைகள் கொண்ட ஆயூஷ் மருந்து : ஆயூஷ் அமைச்சகம் விளக்கம்

 


கடந்த 1980-ஆம் ஆண்டு மலேரியாவின் சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட ஆயுஷ்-64 என்ற பல்வேறு மூலிகைகள் கலந்த மருந்து, கோவிட்-19 சிகிச்சைக்கு ஏற்றவாறு தற்போது மாற்றி உருவாக்கப்பட்டு, பெருந்தொற்று காலகட்டத்தில் வல்லுநர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மருத்துவ சோதனைகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, இந்த மருந்து குறித்து பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடையே ஆர்வமும் பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.இதுதொடர்பாக, கேள்வி பதில் வடிவத்தில் வெளியிட்டுள்ள விளக்கங்கள் பின்வருமாறு:

1. ஆயுஷ்-64 என்றால் என்ன?

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஆயுர்வேத ஆராய்ச்சிக்கான உயரிய அமைப்பான ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய குழு, ஆயுஷ்-64 என்ற மூலிகை கலவைகளாலான மருந்தை உருவாக்கியுள்ளது. சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இந்த கலவை மிகச் சிறந்த நிவாரணியாகும்.

இந்தியா முழுவதும் ஆறு மருத்துவ ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அறிகுறியற்ற, லேசான மற்றும் மிதமான கொவிட்-19 மேலாண்மையில் ஆயுஷ்- 64 மருந்து மிகச்சிறந்த பலனை வழங்குவது தெரியவந்துள்ளது.

2. ஆயுஷ்-64 மருந்தை யார் எடுத்துக் கொள்ளலாம்?

கொவிட்-19 தொற்றின் அனைத்து நிலைகளிலும், நோயாளிகள் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம். காய்ச்சல், அசதி, உடல் வலி, மூக்கடைப்பு, தலைவலி, இருமல் போன்ற லேசானது முதல் மிதமான கொவிட்-19 தொற்று பாதிப்பு உள்ளவர்களும், அறிகுறியற்ற நோயாளிகளும் இந்த மருந்தை, தொற்று உறுதி செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளத் தொடங்கலாம்.

3. கொவிட்-19 தொற்றுக்கு எதிராக இது அறிவியல் பூர்வமாக சோதனை செய்யப்பட்டுள்ளதா?

நாடு முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு மருத்துவ சோதனைகளில், அறிகுறியற்ற மற்றும் லேசானது முதல் மிதமானது வரையிலான தொற்று உள்ள நோயாளிகளின் சிகிச்சையில் மிகச்சிறந்த பலனைத் தருவது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.

4. கோவிட்-19 நோயாளிகள் ஆயுஷ்-64 மருந்தை எவ்வளவு டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

அறிகுறி இல்லாத நோயாளிகள், ஒரு நாளைக்கு இரண்டு முறை, 500எம்ஜி இரண்டு மாத்திரைகளை உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தொடர்ந்து 14 நாட்கள் வெதுவெதுப்பான தண்ணீருடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

லேசானது முதல் மிதமான வரையிலான தொற்று உள்ளவர்கள் மேல் குறிப்பிட்ட அளவை 14 நாட்களுக்கு நாளொன்றுக்கு மூன்று வேளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. ஆயுஷ்-64 மருந்தை எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா?

ஒரு சிலருக்கு , வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனினும் இதற்கு எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள தேவையில்லை.

6. லேசான தொற்று உள்ளவர்கள் ஆயுஷ்-64 மருந்தை மட்டுமே எடுத்துக்கொள்ளலாமா?

ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின் படி லேசான தொற்று உள்ளவர்கள் உரிய நெறிமுறை வசதிகளை உறுதி செய்துகொண்டு இந்த மருந்தை மட்டுமே பயன்படுத்தலாம். எனினும் வீட்டு தனிமையில் உள்ள லேசானது முதல் மிதமானது வரையிலான தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பிற மருத்துவ சிகிச்சைகளுடன் ஆயுஷ்-64 மருந்தையும எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

7. ஆயுஷ்-64 மருந்தை எவ்வளவு நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்?

இந்த மருந்தை குறைந்தபட்சம் 14 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். எனினும் தேவை ஏற்பட்டால் தகுதி வாய்ந்த ஆயுஷ் மருத்துவரின் ஆலோசனையின்படி 12 வாரங்கள் வரையில் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம். 12 வாரங்கள் வரை பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று மருத்துவ ஆய்வுகளின் வாயிலாக அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.

8. இணை நோய்கள் உள்ள கொவிட்-19 நோயாளி, ஆயுஷ்-64 மருந்தை எடுத்துக் கொள்ளலாமா?

ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு அறிகுறியற்ற, லேசான மற்றும் மிதமான கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தால், அவர்கள், ஆயுஷ்-64 மருந்தை பயன்படுத்துவதுடன், தாங்கள் ஏற்கெனவே பயன்படுத்தும் மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

9. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மருந்து பாதுகாப்பானதா?

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் பாதுகாப்பு, அறிவியல்பூர்வ ஆய்வுகளால் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

10. வெளிச்சந்தையில் கிடைக்குமா?

இந்த மருந்தை ஆயுர்வேத மருந்தகங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். எனினும் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459