சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு குறித்து மே. 31-ல் நீதிமன்றம் விசாரணை - ஆசிரியர் மலர்

Latest

29/05/2021

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு குறித்து மே. 31-ல் நீதிமன்றம் விசாரணை

 

Tamil_News_large_2775140

கொரோனா பரவல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை, நாளை மறுதினம் விசாரிக்கவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமாகியுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பெரும்பாலான மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவரை எந்த மாநிலத்திலும் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படவில்லை.

மாணவர்கள் கடிதம்


சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், கடந்த 4 முதல் துவங்க இருந்தன. கொரோனா பரவல் காரணமாக, 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யும்படி, அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அரசுக்கு வலியுறுத்தினர். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலுக்கு இது குறித்து கடிதம் எழுதினர். இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், பிளஸ் 2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், அமைச்சர் அறிவித்தார். பிளஸ் 2 தேர்வை நடத்துவது தொடர்பாக, வரும் 1ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மம்தா சர்மா தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியுள்ளதாவது:கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், பிளஸ் 2 தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது.


நெருக்கடியான சூழல்


'ஆன்லைன்' வழியாகவோ அல்லது நேரடியாக தேர்வு மையத்துக்கு வந்து, மாணவர்களை தேர்வு எழுதச் செய்வதோ கடினமானது. ஏனெனில் எப்போதுமில்லாத மிக நெருக்கடியான சூழலை நாம் சந்தித்து வருகிறோம்.பிளஸ் 2 தேர்வுகளை நடத்தாமல் தள்ளிப் போடுவதும், முடிவு எடுக்காமல் இருப்பதும், வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் கல்வியை பாதிக்கும்.எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி, அப்பாவி மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடக் கூடாது. 


அதனால் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய, மத்திய அரசுக்கும், சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவின் நகலை, மத்திய அரசு, சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., ஆகியவற்றுக்கு அனுப்ப, மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மனுவின் நகலை இரண்டு கல்வி வாரியங்களுக்கும், மத்திய அரசுக்கும் உடனடியாக அனுப்புவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோரிக்கை


இதையடுத்து நீதிபதிகள், 'இந்த மனுவை, 31-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்; பிளஸ் 2 தேர்வுகள் குறித்து, ஜூன் 1-ம் தேதி, சி.பி.எஸ்.இ., ஏதேனும் முடிவுகள் எடுக்கலாம்' என்றனர்.மனுதாரர் தரப்பில், 'இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள், 'எதையும் சாத்தியக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும். வரும், 1ம் தேதிக்குள் தீர்வு கிடைக்கலாம்' என்றனர். சி.ஐ.எஸ்.சி.இ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'பிளஸ் 2 தேர்வு விவகாரம் பற்றி, உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளதால், இது பற்றி உயர் நீதிமன்றங்கள் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது' என்றார்இதற்கு நீதிபதிகள், 'அடுத்த சில நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் எதுவும் நடந்துவிடாது' என்றனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459