'உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட்ட 577 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி..??' - ஆசிரியர் மலர்

Latest

30/04/2021

'உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட்ட 577 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி..??'

 

உத்திர பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் உதவி ஊழியர்களில் மொத்தம் 577 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது. இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்கள், வாக்கு எண்ணிக்கையை தற்போதைய சூழலில் நடத்தாமல் ஒத்திவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.


உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த மாதம் (ஏப்ரல் 2021) உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தது. இந்த தேர்தலின்போது, தேர்தல் பணிக்காக சென்றிருந்த ஆசிரியர்கள் உட்பட பல அரசு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இது தெரியவந்தத்தை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்காக அதிகாரிகளை பணியில் அமர்த்தக்கூடாது எனக் கூறி அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இறந்தவர்கள் தொடர்பான தரவுகளுடன் விளக்கம் அளிக்க அம்மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, சிறப்பு தேர்தல் பணி அலுவலர் எஸ்.கே.சிங் என்பவர், உத்திர பிரதேசத்திலுள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், அவரவர்களின் மாவட்டங்களில் இறந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கைகளை சரிபார்த்து 24 மணி நேரத்திற்குள், அறிக்கையை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார். 

அவர்கள் வழங்கிய அறிக்கையின்படி பார்க்கும்போது, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆசிரியர் சங்கங்கள், உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் உதவி ஊழியர்களில் மொத்தம் 577 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து, இறந்தவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலுடன், மாநில தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கும் ஆசிரியர்களுக்கான சங்கங்கள், இப்போதைய சூழலில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டாம் என்றும், அதை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக பேசியுள்ள உத்திர பிரதேச சிக்ஷக் மகாசங்கின் (ஆசிரியர் சங்கம்) தலைவர் தினேஷ் சந்திர சர்மா என்பவர், 'கொரோனா தொற்றுநோய்க்கு இறந்த 71 மாவட்டங்களைச் சேர்ந்த 577 ஆசிரியர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளோம். 

தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களின் உடல்நலம் குறித்த தகவல்களை பல மாவட்டங்களில் இருந்து இன்னும் முழுமையாக பெறவில்லை. நிலைமை மிகவும் சிக்கலாக இருக்கிறது. இப்படியொரு நிலை ஏற்படக்கூடாதென்றுதான், முன்னதாக தேர்தலின்போதே, தேர்தலை ஒத்திவைக்க கோரி எங்களின் ஆசிரியர் தொழிற்சங்கம், மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது.


ஆனால் அப்போது அந்த கோரிக்கையை ஆணையம் புறக்கணித்தது. அதன்விளைவாக, தேர்தல் காரணமாக கொரோனாவின் சாபத்தை லட்சக்கணக்கான மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் இதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என வேதனை தெரிவித்து இருக்கிறார். மேற்கொண்டு, வாக்கு எண்ணிக்கையை தற்போதைய சூழலில் ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, பொதுமக்கள் மத்தியில் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நாளை முதல் மே 4 காலை 7 மணி வரை முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459