12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? - முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு - ஆசிரியர் மலர்

Latest

11/04/2021

12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? - முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு

 தமிழகத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கும், கடந்த பிப்ரவரி மாதத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், பள்ளிகளில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

 

அதன் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் 9-ம் வகுப்புக்கு ஆண்டு இறுதித்தேர்வும், 10 மற்றும் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

 

அதன்படி, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குறைந்து கொண்டு வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை 4 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. 

 

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வை திட்டமிட்டப்படி நடத்துவதா? அல்லது தேர்வை ஒத்திவைக்கலாமா?, தேர்வை நடத்துவது என்றால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டியவை எவை? என்பது குறித்து கல்வித்துறை சார்பில் கடந்த 2 தினங்களுக்கு முன் ஆலோசனை நடத்தப்பட்டது. 

 

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா என முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளன. 

 

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நாளை மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. 

 

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது பொதுத்தேர்வில் வேறு ஏதும் மாற்றங்கள் கொண்டுவரலாமா என நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுகின்றனர்.  

 

மேலும் நாளை நடைபெறும் கூட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து என்னென்ன முடிவுகள் வெளியாக இருக்கிறது என்று அதிகாரிகள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  

 

வரும் 16ஆம் தேதி 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459