40 ஆண்டு அரியர் தேர்வு மீண்டும் எழுத வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

31/01/2021

40 ஆண்டு அரியர் தேர்வு மீண்டும் எழுத வாய்ப்பு

 


சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 40 ஆண்டுகள் வரை, சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல், 'அரியர்' உள்ளவர்கள், மீண்டும் தேர்வு எழுத, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., விதிகளின் படி, பட்டப்படிப்பு முடிப்பவர்கள், தங்களது படிப்பு காலம் முடிவதில் இருந்து, மூன்று ஆண்டுகளுக்குள் மட்டுமே, அரியர் பாடங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். அதன்பின், அனுமதி அளிக்கப்படாது.ஆனால், தமிழக பல்கலைகளில், மாணவர்கள் நலன் கருதி, கூடுதல் காலம் சலுகை வழங்கப்படுகிறது. 


இதன்படி, சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில் படித்து, 40 ஆண்டுகள் வரை, அரியர் உள்ளவர்கள், தங்களின் தேர்ச்சி அடையாத பாடத்துக்கு, மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முயற்சிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 1980- - 81ம் கல்வி ஆண்டு முதல் படித்து, தற்போது வரை, அரியர் பாடம் வைத்துள்ளவர்கள், 2021 மே மற்றும் டிசம்பர் தேர்வுகளில் பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களை தொலைநிலை கல்விக்கான, www.ideunom.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், டிசம்பர் மாதத்தில் நடத்த வேண்டிய தேர்வு, தாமதமாக நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை, நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459