கட்சி தொடங்கப்போவதில்லை: நடிகர் ரஜினி - ஆசிரியர் மலர்

Latest

29/12/2020

கட்சி தொடங்கப்போவதில்லை: நடிகர் ரஜினி

 



யாரையும் பலிகடா ஆக்க விரும்பவில்லை. எனவே அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

என்னை நம்பி வந்தவர்களை நான் பலிகடா ஆக்கவிரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், அது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன் என்று கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார் நடிகர் ரஜினி.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற குழுவினர் நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி எனக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ப்பட்டது. ஆனால் எனக்கு நெகடிவ் வந்த போதிலும், ரத்தக் கொதிப்பில் மாறுபாடு ஏற்பட்டது. அவ்வாறு இருப்பது எனது உடல்நிலையை பாதிக்கும் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. பல பேருக்கு வேலை இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அனைத்துக்கும் என் உடல்நிலையே காரணம். 

இதை ஆண்டவன் எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கிறேன்.
 

இந்த கரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னைப் பற்றி பேசவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

கடந்த நவம்பர் 30-ம் தேதி நான் உங்களை சந்தித்தபோது, உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். அன்புக்கும், பாசத்துக்கும் தலைவணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்  என்று தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459