மன்னிப்பு கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் கல்வி செயலர் நேரில் ஆஜர் - ஆசிரியர் மலர்

Latest

06/12/2020

மன்னிப்பு கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் கல்வி செயலர் நேரில் ஆஜர்


 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா, அண்ணா பல்கலை பதிவாளர் நேரில் ஆஜராகினர்.



கோவையில், அண்ணா பல்கலை மண்டல மையத்தின், உதவி பேராசிரியர் எம்.சரவணகுமார் தாக்கல் செய்த மனு:கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி நகரங்களில் இயங்கி வந்த, அண்ணா பல்கலை தொழில்நுட்ப மையங்கள், 2012ல் அண்ணா பல்கலையுடன் இணைக்கப் பட்டன.



அண்ணா பல்கலை தொழில்நுட்ப மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனங்கள் குறித்து ஆய்வு செய்ய, வி.பி.முத்துசாமி தலைமையில், ஏழு பேர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது.ஏற்கனவே, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவும், முத்துசாமி தலைமையிலான குழுவும் அறிக்கை அளித்த நிலையில், மீண்டும் ஒரு குழுவை அமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.


கடந்த ஆண்டு பிப்ரவரியில், அண்ணா பல்கலை சிண்டிகேட் கூடி, முத்துசாமி குழு அளித்த அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஏற்பதாக, தீர்மானம் நிறைவேற்றியது. 62 ஆசிரியர்கள் மற்றும், 13 ஊழியர்களை பணிக்கு எடுப்பது என்றும், அதில் கூறப்பட்டது.ஆனால், சிண்டி கேட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமல்படுத்தவில்லை.இந்நிலையில், தீர்மானத்தின் படி தகுதியானவர்களை பணிக்கு எடுக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தாமல், நீதிமன்ற உத்தரவை மீறுகின்றனர்.



எனவே, உயர் கல்வித்துறை செயலர் மற்றும் அண்ணா பல்கலை பதிவாளருக்கு எதிராக, நீதிமன்றஅவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன், அரசு சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், அண்ணா பல்கலை சார்பில், வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராயினர்.


நீதிமன்ற உத்தரவுப்படி, உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா, அண்ணா பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி ஆகியோர், நேரில் ஆஜராகினர்.உயர் கல்வித்துறை செயலர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 'சிண்டிகேட் கூட்டத்தில், இந்த விஷயத்தை முன்வைக்கும் போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முயற்சிகள் எடுப்பேன்.'நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக முடிவுக்கு வந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என, கூறப்பட்டுள்ளது.


இதை பதிவு செய்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை முடித்து வைத்து, நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459