பல்கலைக்கழக பாடப்புத்தகங்கள் மின்னூல்களாக மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

30/12/2020

பல்கலைக்கழக பாடப்புத்தகங்கள் மின்னூல்களாக மாற்றம்

 


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 80 இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான மின்னூல்களாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. 6 மாதங்களுக்குள் இப்புத்தகங்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் கே.ரத்னகுமார், ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

”தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 42 இளநிலைப் பட்டப்படிப்புகள், 38 முதுநிலைப் பட்டப்படிப்புகள் என 80 படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் என 60 படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்பு பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் சுமார் 8,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்படிப்புகள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் உயர்கல்வி மன்றத்தின் அங்கீகாரத்துடன் வடிவமைக்கப்பட்டவை. இவற்றில் சேர்ந்துள்ள மாணவர்களுக்குப் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் மின்னூல்களாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சுமார் 6 மாத காலத்திற்குள் 80 இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், மின்னூல்களாக மாற்றப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட உள்ளன.கே.ரத்னகுமார்

2021-ம் ஆண்டுக்குப் பிறகு பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக, மின்னூல்களை மட்டுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. அதைச் செயல்படுத்துவதற்கான பணியில் முனைப்புடன் செயலாற்றி வருகிறோம்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு, பயனர் முகவரி மற்றும் ரகசியக் குறியீடு வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதலாக மின்னூல்களையும் தேடி எடுத்துப் படிக்கலாம்.

தற்போது மாணவர்களின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள 90 அரசு கலைக் கல்லூரிகளில் கற்றல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்கள் மூலமாக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள் நடத்தப்பட உள்ளன. கல்லூரிக்குச் சென்று படிக்க இயலாதவர்கள் இம்மையங்களில் சேர்ந்து படிக்கலாம். அரசு கலைக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள, உறுப்புக் கல்லூரிகளிலும் விரைவில் கற்றல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதன் மூலம் மாணவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள மையங்களில் சேர்ந்து படித்துப் பட்டம் பெறலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இணையவழி வகுப்புகள் நடைபெறும். செமஸ்டர் தேர்வுகளையும் இம்மையத்திலேயே எழுதிக் கொள்ளலாம். அறிவியல் செய்முறை வகுப்புகளுக்கு இங்குள்ள ஆய்வகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான அனைத்து நிதி ஆதாரங்களையும், சம்பந்தப்பட்ட மையங்களுக்குப் பல்கலைக்கழகமே வழங்கும்”.

இவ்வாறு பதிவாளர் கே.ரத்னகுமார் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459