கல்லூரி படிப்பிற்கு நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது... மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்..! - ஆசிரியர் மலர்

Latest

22/10/2020

கல்லூரி படிப்பிற்கு நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது... மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்..!

 


கல்லூரி படிப்பிற்கு நுழைவுத் தேர்வு என்பதை ஏற்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் ஒரு குழுவும், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு குழுவும் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து வந்தது.இந்நிலையில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பல தரப்பினரிடமும் கலந்தாலோசித்த உயர்கல்வித்துறை குழு மத்திய அரசுக்கு தனது அறிக்கையை இன்று அனுப்பியிருக்கிறது. அதில் கலை அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கும் நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க இயலாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதேபோல் உயர்கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தால் அது ஏழை எளிய மாணவர்களை பாதிக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்த்திருக்காது என கருதப்படுகிறது. இதனிடையே புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய உயர்கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா தலைமையில் அமைக்கப்பட்ட குழு விரைந்து செயல்பட்டு அறிக்கையை அளித்துள்ளது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு இந்த விவகாரத்தில் போதிய அக்கறை காட்டாதது போல் தெரிகிறது. 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடிய வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இது குறித்து விரைந்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையிலான குழு பெயருக்கு ஒரு கூட்டத்தை நடத்தியதோடு தனது கடமையை நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.இதனிடையே உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவின் இந்த துரித நடவடிக்கைக்கும், அறிக்கைக்கும் கல்வியாளர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459