ஆன்லைன் கல்வி : கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் - ஆசிரியர் மலர்

Latest

02/09/2020

ஆன்லைன் கல்வி : கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்


மாணவர்கள் நலன் அனைவருக்குமான பொறுப்பு. ஆன்லைன் கல்வியில் வழிகாட்டுதல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரியும், மாணவர்களின் உடல் நலனை உறுதிசெய்யக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் எப்படிப் பின்பற்றப்படுகின்றன? மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படிக் கல்வி வழங்கப் போகிறார்கள்?, தனியார் பள்ளிகள் முன்கூட்டியே பதிவு செய்து வகுப்புகளை நடத்துவது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர், “ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராகப் புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்கூட்டியே பதிவு செய்த வகுப்புகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட பள்ளிகள்தான் முடிவெடுக்க வேண்டும். மலைவாழ் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமாக கல்வி வழங்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிகள் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
“மாணவர்களின் நலன் அனைவரின் பொறுப்பு. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளைப் பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாதபடி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459