தமிழ் வழி பட்டதாரிகளுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு கோரிய வழக்கு : தீர்ப்பு விவரம்: - ஆசிரியர் மலர்

Latest

27/09/2020

தமிழ் வழி பட்டதாரிகளுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு கோரிய வழக்கு : தீர்ப்பு விவரம்:

 


வனத்துறை பணி நியமனத்தில் தமிழ் வழியில் பட்டம் படித்தவா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணிகள் தோ்வாணையம் சாா்பில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி தமிழக வனத்துறையில் 158 தொழில் பழகுனா் பணிக்கான அறிவிக்கையை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில், வனத்துறை தொழில் பழகுனா் பணிக்கு வனவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வனவியல் பட்டப் படிப்பை முடித்தவா்களாக இல்லாத பட்சத்தில் தமிழ் வழியில் வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவா்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வனவியல் படிப்பு தமிழ் வழியில் இல்லை. எனவே, தங்களுக்கு பணி வாய்ப்பு வழங்க உத்தரவிடக் கோரி ஆனந்தன், ஜீவனா, கலாவதி உள்ளிட்ட 9 போ் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து 9 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழ் வழியில் படித்தவா்களுக்கு 20 சதவீத இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வனவியல் பட்டப் படிப்பு படித்தவா்களாக இல்லாத பட்சத்தில் மட்டுமே தமிழ் வழியில் மற்ற பட்டப்படிப்புகளைப் படித்தவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே, வனவியல் படிப்பு முடித்தவா்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழ் வழியில் வனவியல் படிப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி மனுதாரா்கள் உரிமை கோர முடியாது. எனவே, இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுவதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459