பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு திட்ட மாணவர்களுக்கு சத்துணவில் உள்ள உணவு பொருட்களை வழங்கவும் திட்டம் வகுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான ஆர். சுதா பொது நல வழக்கு தொடர்ந்திருந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கவும், தேவைப்படும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கவும் உத்தரவிட்டனர். முட்டை வழங்கும் பணியில் ஆசிரியர்களை பயன்படுத்தும்படியும், அதுகுறித்த திட்டமிடலை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 23 லட்சத்து 86 ஆயிரம் மாணவிகள் மற்றும் தாய்மார்களுக்கு 71 லட்சத்து 59 ஆயிரம் நாப்கின்கள் ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள செவிலியர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேசமயம் சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டுமென்ற உத்தரவை அமல்படுத்தும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
முட்டை வழங்க முடியாது என்ற விளக்கத்தால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் வார்த்தைகளான “முட்டை வழங்க முடியாது என்பதற்கு காரணங்களை சொல்லாதீர்கள்” என சுட்டிக்காட்டி, மாணவர்களுக்கு முட்டை எப்படி வழங்க முடியும் என்பதை முடிவெடுங்கள் என உத்தரவிட்டனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில் முட்டை வழங்க முடியாது என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட முடிவெடுத்துள்ளதா என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், மாணவர்களின் பெற்றோரை அழைத்து முட்டைகளை வழங்க இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முட்டைகளையும் வழங்க வேண்டும். பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்குவது குறித்தும் அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்ப்பப்ட்டுள்ளது.
No comments:
Post a Comment