பள்ளிகள் திறப்பு எப்போது ?: தமிழக முதல்வர் பதில் - ஆசிரியர் மலர்

Latest

09/08/2020

பள்ளிகள் திறப்பு எப்போது ?: தமிழக முதல்வர் பதில்


கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது, உயிர் சம்பந்தப்பட்டது. எனவே, குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம் என்பதால், நோய் பாதிப்பு குறைந்ததும், பள்ளிகள் திறக்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.
சேலத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த, மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். கூட்டத்துக்கு பின், முதல்வர் இ.பி.எஸ்., அளித்த பேட்டி:தமிழகத்தில், பருவ மழை பெய்து வருவதால், அனைத்து அணைகளின் நீர்மட்டமும், படிப்படியாக உயர்ந்து வருகிறது. டெல்டா பகுதிகளில், நடப்பாண்டு, 4 லட்சம் ஏக்கரில், நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. 
அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் வாயிலாக, 28 லட்சம் டன் நெல் கொள்முதல் நடந்துள்ளது.கடைமடை விவசாயிகளுக்கும், தண்ணீர் கிடைக்க, கால்வாய் சீரமைக்கப்பட்டதுடன், தடுப்பணை கட்டி, வீணாகும் உபரிநீர், சேமிக்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மை திட்டத்தில், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.டாக்டர்கள், நர்ஸ்கள், கொரோனா பணியில் இறந்தால், 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. காப்பீடு திட்டம் வாயிலாக, அத்தொகையை வழங்க, மத்திய அரசு முன் வந்தது.எனவே, இதர பணியாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து, தற்போது, அதை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு, இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை.கொரோனா பரவல், உயிர் சம்பந்தப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். எனவே, நோய் தொற்று குறைந்ததும், பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்
'அத்தியாவசிய பொருட்கள்தடையின்றி வினியோகம்'
முன்னதாக, ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:ஊரடங்கு காலத்தில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வினியோகம் செய்யப்பட்டுள்ளன.தொழிற்சாலைகள், வேளாண் பணிகள், 100 நாள் வேலை திட்ட பணிகள், முழுவீச்சில் செயல்படுகின்றன. மக்களின், அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.பருவ மழை காரணமாக, தட்டுப்பாடின்றி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பொதுமக்களுக்கு கிடைத்து வருகிறது. 

முதல்வர் சிறப்பு குறைதீர் திட்டம், இடைப்பாடியில் துவங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா, பட்டா மாறுதல் போன்ற நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதர கோரிக்கை மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நோய் பரவல் படிப்படியாக குறைவதால், மாநகர் பகுதிகளில், சிறு கோவில்கள் திறக்கவும், ஒட்டுனர் பயிற்சி பள்ளி செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு வழிமுறைகளை பின்பற்றி, மக்கள் ஒத்துழைப்பு நல்குவதால், மாவட்டத்தில், நோய் தொற்று குறைந்து வருகிறது.இவ்வாறு, முதல்வர் பேசினார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459