மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி கற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

03/08/2020

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி கற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை


தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வை திறன், காது கேட்கும் திறன் பாதிப்பு உள்ளிட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் படித்து வந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நீண்ட காலமாக கல்வி கற்காமல் மாற்றுத் திறனாளி மாணவர்கள் இருப்பதால் கல்வியில் பின்தங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு தொலைக்காட்சி, ஆன்லைன் உள்ளிட்டவற்றின் மூலம் கல்வி கற்றுத் தரப்படுகிறது. இவற்றில், காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு புரியும் வகையில் சைகை மொழியில் விளக்குவதில்லை. பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களை பொறுத்தவரை பிரெய்லி தேவைப்படும். ஆனால், தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் அது சாத்தியமில்லை. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஏற்றவாறு கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப வேண்டும்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு கல்வி கற்றுத் தராவிட்டால் அவர்களை மீண்டும் படிப்புக்குள் வரவைப்பது சிரமமாக இருக்கும். இதனால், அவர்கள் கல்வியில் பின்தங்கக்கூடிய வாய்ப்புள்ளது. என்றனர்.

இதுதொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கல்வி தொலைக்காட்சியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் சைகை மொழியில் ஒளிபரப்புவதற்கான பணிகள் முடிந்து நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பப்படும். பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஏற்கெனவே ஒளிப்பரப்பாகி வரும்நிகழ்ச்சிகளின் குரல் பதிவை கேட்டறிந்து வருகின்றனர்.அதனால், சிக்கல் எதுவும் இல்லை. கல்வி தொலைக்காட்சி, ஆன்லைனில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு சிறு மாற்றங்களை செய்து கல்வி கற்பிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது விரைவில் நடைமுறைக்கு வரும். கரோனா பரவி வருவதால் தற்போதைக்கு வீடுகளுக்குச் சென்று பாடம் கற்றுத் தருவது சாத்தியமில்லை" என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459