வியாழன் கோளின் நிலாவில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் - ஆசிரியர் மலர்

Latest

25/06/2020

வியாழன் கோளின் நிலாவில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல்


கலிபோர்னியா: வியாழன் கோளின் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்றான யூரோபாவில் உள்ள கடல் மேற்பரப்பில் உறைந்த நிலையில் நீர் இருப்பதால், அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள், நீர் கொண்ட தாதுக்களை உடைப்பதன் மூலம் இந்த கடல் உருவாகியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். மெய்நிகர் கோல்ட்ஸ்மிட் புவி வேதியியல் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விஞ்ஞானிகளின் பணிகள் இன்னமும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. நாசாவின் கலிலியோ மிஷன் மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஆகியவற்றின் தரவுகளை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் தங்கள் மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
யூரோபாவில் உருமாற்றத்தால் கடல் போன்று உருவாகியிருக்கலாம். வெப்பம், அழுத்தம் அல்லது பிற இயற்கை நிகழ்வுகளால் பாறைகளின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாமென ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2016ல் அதன் மேற்பரப்பில் நீராவி புகை வெளியேறியதற்கான ஆதாரம் இருந்ததை கண்டறிந்திருந்தனர். வெப்பமயமாதல், அதிக அழுத்தம் ஆகியவற்றால் இயற்கையான கதிரியக்கம் அல்லது வியாழன் கோளின் ஈர்ப்பு விசையால் உருவாகும் அலை போன்றவற்றால், நீர் தாதுக்களில் இருக்கும் தண்ணீர் வெளியேறி இருக்கலாமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த கடல் உயிர்கள் வாழக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக கூறியுள்ள விஞ்ஞானி மோஹித் மெல்வானி,  நாசாவின் யூரோபா கிளிப்பர் திட்டம், அடுத்த சில ஆண்டுகளில் துவங்கப்படவுள்ளது. எனவே எங்கள் பணி, யூரோபாவின் வாழ்விடத்தை ஆராயும் இந்த திட்டத்துக்கு தயாராகும் நோக்கத்தில் உள்ளது, என அவர் கூறியள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459