தலைமை செயலகத்தில் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை - ஆசிரியர் மலர்

Latest

09/06/2020

தலைமை செயலகத்தில் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை


சமீபத்தில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளானார். மற்றொரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவர் நேற்று தலைமை செயலகத்துக்கு பணிக்கு வந்திருந்தார். அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்றும் நலமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
தலைமை செயலகத்தில் கொரோனா தொற்றை தடுக்க தீவிர பரிசோதனையில் அரசு இறங்கியுள்ளது.
சானிடைசர், சோப்பு உள்ளிட்டவற்றை தேவையான அனைத்து இடங்களிலும் அரசு வைத்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து இதுவரை 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தலைமை செயலகத்துக்கு தினமும் வரும் 50 சதவீத பணியாளர்களுக்கு கொரோனா தடுப்புக்காக தானியங்கி சானிடைசர், சோப்புகள், முககவசங்கள், ஓமியோபதி உள்ளிட்ட மருந்துகளை வழங்கியதற்கு அரசுக்கு நன்றி. கடந்த வாரங்களில் 40 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனை மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பழகியவர்களுக்கும் தொற்று அபாயம் உள்ளது. எனவே சமுக இடைவெளிக்கு வழிவகுக்கும் வகையில் 50 சதவீத பணியாளரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக குறைக்க வேண்டும். அரசுப் பணியாளர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459