புற்றுநோய் அறிகுறிகள் - ஆசிரியர் மலர்

Latest

14/05/2020

புற்றுநோய் அறிகுறிகள்


சப்தமில்லாமல் நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று
. இது வந்துவிட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, அதற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டாலும், மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகம்தான். புற்றுநோய் அறிகுறிகள் (Cancer Symptoms) மற்றும் இந்த நோயிலிருந்தும் இதனால் ஏற்படும் பயத்திலிருந்தும் விடுபடும் வழியை தருகிறது இக்கட்டுரை. தொடர்ந்து படியுங்கள்...
புற்றுநோய் என்றால் என்ன?
உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கிறோம். இந்த நோய்பற்றி அறிந்துகொள்வதற்குமுன் இயல்பாக உள்ள உயிரணுக்கள் எவ்வாறு புற்றுநோய் அணுக்களாக மாறுகிறது என்று பார்ப்போம்!
புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது.
நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன.
எல்லாக் கட்டிகளுமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை; அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதில்லை.
சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்கின்றன. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிக்கின்றன. ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதனால், உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகிறது.
புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல.
ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய்க்கு காரணம் என்ன?
இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணி இல்லை. அடிப்படையாக உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது. புகையிலை உபயோகித்தல், உணவுமுறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை, வாழ்க்கைமுறை ஆகியவை இம்மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்தகைய மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வரலாம்.
சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. உதாரணமாக எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்றவை.
நெருங்கிய உறவினர்களுக்குப் புற்றுநோய் இருந்தால் மருத்துவரிடம் விபரம் தெரிவித்து புற்றுநோய் உங்களுக்கு வரும் வாய்ப்பு குறித்து கலந்தாலோசிக்கவும்.
புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் (Cancer Symptoms):
உடலில் புற்றுநோய் ஏற்படும் பாகத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். கீழ்க்கண்ட அறிகுறிகள் புற்றுநோய் தவிர மற்ற நோய்களிலும் ஏற்படலாம். எனவே, இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
1.குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு
2.முழுங்குவதில் தொடர் சிரமம், தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல் நாக்கை அசைப்பதில் சிரமம்
3.மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம். (உதாரணம்: தொடர் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்  போக்கு) சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம்.
4.உடலில் கட்டி தோன்றுதல். புற்றுநோயில் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை. பரவிய பிறகுதான்   வலி ஏற்படும்
.
5.உடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாகுதல், அல்லது அவற்றின் நிறத்தில் மாற்றம்
 காரணமில்லாமல் எடை குறைவு
6.பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி   மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு
புற்றுநோய்க்கு முந்தைய நிலையை எவ்வாறு கண்டுகொள்வது?
வாயில் தோன்றும் புற்றுநோய்கள்
1.புகை மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் மாதத்துக்கு ஒருமுறையாவது தாங்களே கண்ணாடியின்  உதவியுடன் வாயைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
2.ஆறாத புண்
3.கட்டி, தடிப்பு
4.ஈறு, நாக்கு மற்றும் வாயின் பிற பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு நிறமாகுதல்
மார்பகப் புற்று நோய்கள்:
பெண்கள் மார்பகங்களைச் சுய பரிசோதனை (மாதம் ஒரு முறை) செய்து கொள்வதன் மூலமும், மருத்துவர் மூலம் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதன் மூலமும், மேமோகிராபி (mam­mography) மூலம் பரிசோதனை (40 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்துக்கு ஒரு முறை) செய்துகொள்வதன் மூலமும் மார்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கள்:
உடலுறவு ஆரம்பித்த மூன்று வருடங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையின் வாயிலில் வரும் புற்று-நோய்க்காக மருத்துவரை அணுகி Pap Smear செய்துகொள்வது நல்லது.
புற்றுநோயைத் தடுக்க முடியுமா?
புற்றுநோயைத் தடுக்க உத்திரவாதமான முறை ஏதும் இல்லை.
ஆனால், சரியான வாழ்க்கைமுறையின் மூலம் நோய் ஏற்படும் வாய்ப்பை பெருமளவில் குறைக்க முடியும்.
புகையிலைப் பொருட்களைப் (உதாரணம்: சிகரெட், பீடி, பான் வகைகள்) பயன்படுத்தாமை மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் ஒரு சேர இருப்பது தொண்டைப் புண்களின் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறைந்த கொழுப்பு, அதிகக் காய்கறி, பழம், முழுமையான தானியங்கள் உட்கொள்ளுதல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளைத் தவிர்த்தல்
உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்தல்.
சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாத்தல். சூரியக்கதிர் தடுக்கும் களிம்பு (sunscreen lotion) பயன்படுத்துதல் மற்றும் இதற்காகத் தகுந்த உடையணிதல்.
சுத்தமான சூழலில் இருத்தல்
வைரஸ்களால் ஏற்படும் குறிப்பிட்ட புற்றுநோய்களை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்.
புற்றுநோயும் வலியும்:
புற்றுநோய் என்றால் அதிக வலி தரும் நோய் என்று பரவலான கருத்தும் பயமும் உள்ளது. எந்த வகையான புற்றுநோய், எவ்வளவு பரவி உள்ளது, நோயாளியின் பொறுத்துக்கொள்ளும்தன்மை இவற்றைப் பொறுத்து வலியின் அளவு மாறுபடும்.
வலியைக் கட்டுப்படுத்த தகுந்த மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளும்போது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதுடன் வலி மருந்துகளுக்கு அடிமையாவதையும் தடுக்கலாம்.
புற்றுநோயும் மனச்சோர்வும்:
25% புற்றுநோயாளிகளை மனச்சோர்வு பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் வந்துவிட்டால் மனச்சோர்வு அடைவது இயல்பு என்று நினைத்து அதைப்பற்றி மருத்துவருடனோ நெருங்கிய உறவினர்களுடனோ சொல்லாமல் விட்டுவிடுகின்றனர். புற்றுநோய் என்று தெரிந்தவுடன் சாவு பற்றிய பயம், குடும்பத்தாரின் எதிர்காலம்பற்றிய கவலை,
நோயின் தீவிரம் குறித்து பதட்டம், வாழ்க்கைமுறையில் மாற்றம், வருமானம் மற்றும் வேலை இப்படி பல சிந்தனைகளால் மனச்சோர்வு அடைய நேரிடும். இது இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது அவசியம். நோயாளி மட்டுமின்றி குடும்பத்தாரும் பதட்டம் மற்றும் மனச்சோர்விற்கு ஆளாகலாம். அவர்களும் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459