தாய்பால் எனும் ஜீவ நதி நூலும் கவிர் ஷெரிப்பின் விளக்கவுரையும் - ஆசிரியர் மலர்

Latest

02/05/2020

தாய்பால் எனும் ஜீவ நதி நூலும் கவிர் ஷெரிப்பின் விளக்கவுரையும்


தொடர் வாசிப்பில் இன்று   நான் படித்த 29 வது புத்தகம் எனது நண்பர், தோழர், மருத்துவர். மந்திரி குமார் அவர்கள் எழுதிய? தாய்பால் எனும் ஜீவ நதி . தோழர் சிவகாசி ஈ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் மருத்துவராக பணி புரிகிறார். அரசு வேலையையும் பார்த்துக் கொண்டு இலாப நோக்கில் தனியாக கிளினிக் நடத்தி வரும் பெரும்பாலான மருத்துவர்கள் மத்தியில் அரசு கொடுக்கிற ஊதியமே போதுமானது என்ற மன நிறைவுடன் தனியாக கிளினிக் வைக்காமல் செயல்பட்டு வருகிறார். இவர் இலக்கியம், தத்துவத்தில் தனது தேடலை தொடர்ந்து கொண்டிருக்கிறார். சாதாரண காய்ச்சலுக்கு ஒரு ஊசி போட்டு மருந்து , மாத்திரை வாங்குவதற்கு குறைந்த பட்சம் ரூ.200 /= ஆகி விடுகிறது.
மருத்துவர் . மந்திரி குமார் அவர்களது தாய்ப்பால் எனும் ஜீவ நதி புத்தகத்தை ரூ 150/= கொடுத்து வாங்கி வைத்துக் கொண்டால் பிரசவித்த பெண்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மருத்துவச் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இனி புத்தகத்திற்குள்

#Book Day
நூல் : தாய்ப்பால் எனும் ஜீவநதி
நூல் ஆசிரியர் :மரு. மந்திரி குமார்
பக்கம் : 155
விலை. :ரூ.150.00
பதிப்பகம் : அமிர்தா ஊடக மையம்
Web.www.amirthamedia.com
நூல் விமர்சனம்

லெமன் சிட்டி இதழில் தொடராக வெளிவந்ததை தொகுத்து தாய்ப்பால் எனும் ஜீவ நதி மருத்துவ நூல் ஆகும்.
மருத்துவராக பணி புரியும் நூல் ஆசிரியர் திருமணம் ஆவதற்கு முன்னாளே இத்தகு  தாய்ப்பால் குறித்து கட்டுரையை இலக்கிய நயத்தோடும், முற்போக்கு சமூக சிந்தனையோடும் , தாய்மார்களின் உளவியலை  மிக நுட்பமாக பதிவு பதிவு செய்துள்ளார்.
ஒரு பெண் கர்ப்பம் தறித்ததிலிருந்து  குழந்தை பெற்று வளர்ப்பது வரையுள்ள அனைத்து விசயங்களையும் தெரிவித்துள்ளார். தாய்ப்பால் எனும் ஒற்றை சொல்லை மையமாக வைத்து 145 பக்கத்தில் மருத்துவ கட்டுரையை உருவாக்கியுள்ளார்.
இலவச மருந்து வசதிகள் ஒருபுறமும், அதைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லாத பாமர மக்கள் இன்னொரு புறமும் இருக்க அதற்கு இடைப்பட்ட தூரத்தில் நாம் தான் இருக்க வேண்டும் என்கிற பொது சிந்தனையின் வெளிப்பாடாக இக் கட்டுரை தொகுப்பு அமைந்துள்ளது.இந் நூலில்
மருத்துவர் தாய்மார்களிடம் பேசிக்கொண்டே செல்கிறார்.
தாய்ப்பாலை மூளை சுரக்கிறது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?
அப்படி உங்களில் யாருக்காவது தெரிந்து இருந்தால் நான் அவர்களுக்கு மருத்துவ சல்யுட் அடித்துக் கொள்கிறேன். தாய்ப்பாலை மூளை சுரக்கிறது. மூளையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரக்கின்ற ஆக்சிடோஸின்,புரோக்லாக்டின் ஹார்மோன்கள்
தான் தாய்ப்பால் சுரத்தலுக்கான வேலையைச் செய்கின்றன.
ஒரு நாளைக்கு எத்தனை முறை தாய்ப்பால் தருவீர்களோ அதைப் பொருத்து தான்  தாய்ப்பால் சுரத்தல் அதிகமாகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டும் என்றால் பிரசவித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தாய்ப்பாலுட்ட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை துண்டிக்கும் முன்பே தாயின் மார்பில் குழந்தையை போட்டு சுவைக்கச் செய்து ஆக்ஸிடோசின் , ஹார்மோனை சுரக்கச் செய்கிறார்கள் மருத்துவர்கள்.
குழந்தைகள் அழுகின்ற போதெல்லாம் நம்மிடம் தாய்ப்பால் கேட்டுத்தான் அழுகிறார்கள் என்பதை மனதளவில் உணரும் போது தாய்ப்பால் சுரத்தல் மார்பிலே அதிகரிக்கிறது என்பது உங்களால் எத்தனை பேருக்கு தெரியும் ?தாய் பாலூட்டுவதற்கு உங்களது உடம்பு அக்கறையுடன் செயல்பட்டாலும், அதற்காக மனதும் சேர்ந்தே தயாராக வேண்டியது அதை விட அவசியம்.
"தாய்ப்பால் உணவல்ல உயிர்".
தாய்ப்பாலை சரியாக கொடுக்கின்ற தாய்மார்கள் கூட செய்கின்ற தவறு ஒன்று இருக்கிறது. அது தான் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பது. கேட்டால் தாய்ப்பால் பசிக்காக , தண்ணீர் தாகத்திற்காக  என்பார்கள். தாய்ப்பாலில் 88% தண்ணீர் இருக்கும் போது தனியாக தண்ணீர் கொடுக்க வேண்டியதில்லை
.
நீங்கள் கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல  தாய்ப்பாலூட்டும் காலத்தில் கூட  அதிகமான சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது உங்கள் முகத்திற்கும் குழந்தையின் கண்களுக்கும் இடைப்பட்ட தூரம் சராசரியாக 20 செ.மீ இருக்கிறது. எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்கிறீர்களோ அந்தளவுக்கு உங்களது முகம் குழந்தைக்கு பதிந்து விடுகிறது.
பிரசவிக்கின்ற அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஆக்ஸிடோசின் ஊசி போடப் படுகிறது. இதனால் பிரசவத்தின் போது ஏற்படுகின்ற இறப்புகள் தடுக்கப்படுகின்றன.
ஒரு பிரசவத்திலிருந்து அடுத்த பிரசவத்திற்கான இடைவெளியானது சுகப்பிரசவம் ஆகிறவர்களுக்கு இரண்டு வருடங்களும் சிசேரியன் செய்து கொண்டவர்களுக்கு மூன்று வருடங்களும் தேவையாகிறது.
நாம் கருத்தடை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம்  அதிகரிக்க வே முடியும். அதாவது 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் போது 98 சதவீதம் இற்கையான கருத்தடை என்பது வேலை செய்கிறது.
உலகிலேயே மக்கள் இறப்பில் புற்றுநோய் தான் இரண்டாம் இடம் வகிக்கிறது.
தாய்ப்பால் ஊட்டுவதால் ஈஸ்ட்ரோஜென் தாக்கத்தை குறைத்து புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. மேலும் தாய்ப்பால் கொடுப்பதினால் இருதய நோய், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. தாய்ப்பால் குடித்து வரும் குழந்தைகள் நுரையீரல் தொற்றுக் கான நிமோனியா , வயிற்றுப் போக்கு , சீல் வடிதல் போன்ற நோய்களிலிருந்து பாது காக்கப் படுகின்றனர்.
மார்பகத்தின் அளவை வைத்தும், வடிவத்தை
வைத்தும் தாய்ப்பால் சுரப்பதில்லை என்பதை கட்டாயமாக கர்பிணிப் பெண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மார்பகத்தின் உள்ளே பளீர்.. பளீரென்று குத்துவதைப் போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படும். இது பயப்பட வேண்டிய விசயம் அல்ல. கர்ப்ப காலத்திலே ஹார்மோன்களால் மார்பகத்தில் ஏற்படுகின்ற வளர்ச்சியின் காரணமாகத் தான் உண்டாகின்றன. சிறிய செல்களும் , தசைகளும் விரிவடைவதாலும் அதற்கு தேவையான இரத்தம் அதிகமாக இரத்தக் குழாய்களில் வருவதாலும் தான் இப்படியான வலி உண்டாகுகிறது.
கர்ப்பம் ஆகி விட்டால் பெண்கள் அதற்கேற்ப ஆடைகளையும்,உள்ளாடைகளையும் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
தாய்ப்பால் புகட்டுவதற்கு சேலையே பாதுகாப்பானதாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் போது தாராளமாக நைட்டி அணிந்து கொண்டு தாய்ப்பால் புகட்டலாம்.
குழந்தை எப்போதும் அம்மாவின் உடலோடு உடலாக ஒட்டியவாறே தூங்க வைக்க வேண்டும். அவர்களை தனியாகவோ தொட்டில்களில் போட்டோ தூங்க வைப்பதை முடிந்தளவிற்கு தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நேரத்தில் சேலையில் செய்த தொட்டிலில் குழந்தையை தூங்க வையுங்கள்.
பிள்ளைப் பெற்றவள் உடல் வலுப்பெறு வதற்காகவும், பிரசவித்த புண் ஆற்றுவதற்காகவும் , தாய்ப்பால் நன்கு சுரப்பதற்காகவும் வீட்டி விருந்தே ஓமக்களி, சுக்குகளி, விரலி மஞ்சள் அரைத்த உருண்டை , பிரண்டை துவையல், உளுத்தங்களி ,வெள்ளைப்பூண்டு களி, பால் சுறா மீனோடு சேர்த்து சமைக்கிற ஓமக் கறி, பேறுகால மருத்து
, முருங்கை கீரை பொறியல் , கருவாட்டுக் குழம்பு, கோழிச் சாறு இப்படியாக கொடுத்துத் தான் பிள்ளைப்பேற்றின் சந்தோசத்தை உணவின் வழியே முன்னோர்கள் அன்பை பரிமாறிக் கொண்டார்கள்.
பிரசவித்த அம்மாகளுக்கு இயற்கையான உணவையும், சத்தான பழங்களையும்  , படித்து தெரிந்து கொள்வதற்கு இது போன்ற புத்தகங்களையும் வாங்கிக் கொடுங்கள். இப் புத்தகம் எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். குழந்தை பெற்றவர்களை பார்க்கச் செல்லும் போது இப் புத்தகத்தை அவர்களுக்கு  வழங்கலாமே..
தோழமையுடன்,
க.ஷெரீப்,
சிவகாசி.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459