இரும்பு சத்து சூப் தயாரிப்பது எப்படி ? - ஆசிரியர் மலர்

Latest

20/05/2020

இரும்பு சத்து சூப் தயாரிப்பது எப்படி ?


நம் முந்தைய தலைமுறையினர் மன பலமும் உடல் பலமும் பெற்றவர்களாக விளங்கினர். அதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் உட்கொண்ட உணவு. ஆனால், இன்றைய இளைய சமுதாயத்துக்கு அத்தகைய பாரம்பரியமிக்க உணவுகள் செயல்பாட்டில் இல்லை என்பது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக்கூட அலட்சியப்படுத்துகிறார்கள். இப்போது எளிதாக கிடைக்கும் பொருட்களில் ஒன்றான முருங்கைக்கீரையில் முக்கிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதில் அடங்கியுள்ள
அபரிமிதமான இரும்புச்சத்து ரத்த விருத்திக்கும், உடல் வலுப்பெறவும், மூளை சுறுசுறுப்படையவும் உதவும். அப்படிப்பட்ட முருங்கையுடன் பாரம்பரியமான சில பொருட்களைச் சேர்த்து இந்த சூப் செய்து பருகுங்கள். வைட்டமின்கள், கனிமச்சத்துகள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை அடங்கிய அற்புதமான சூப் இது.
என்ன தேவை?
முருங்கைக்கீரை - 5 கைப்பிடி அளவு
பொன்னாங்கண்ணிக்கீரை - 5 கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் - 8 - 10
பூண்டு - 10 பல்
கிராம்பு - 2
பட்டை - ஒன்று
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
மிளகு, சீரகம் (பொடித்தது) - ஒரு டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இரண்டாவது முறை அரிசியைக் களைந்த தண்ணீர் - 5 டம்ளர்
எப்படிச் செய்வது?
செய்முறை: முதலில் கீரைகளைச் சுத்தம் செய்து அலசி ஒரு குக்கரில் போடவும். பிறகு அதனுடன் தோலுரித்த சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, நறுக்கிய தக்காளி, கிராம்பு, பட்டை, பாசிப்பருப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 டம்ளர் அரிசி களைந்த சுத்தமான தண்ணீர்விட்டு ஐந்து விசில் வந்ததும் இறக்கி வடிகட்டவும். அதில் வடிகட்டிய சக்கையை ஒரு மிக்ஸியில் ஓர் ஓட்டு ஓட்டி அதை மீண்டும் வடிகட்டிய தண்ணீர்விட்டு கலந்து வடிகட்டவும் (இதனால் சத்துகள் வீணாகாமல் இருக்கும்). பிறகு அதில் பொடித்த மிளகு, சீரகம் மற்றும் எலுமிச்சைச்சாறுவிட்டு சூடாகப் பருகவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459