வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

06/05/2020

வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு


திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து  இந்தியா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். மேலும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பலர் சொந்த நாடுகளுக்கு  திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்
. ஆனால் விமான சேவைகள் இல்லாததால் அந்தந்த நாடுகளில் சிக்கி அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், 13 நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் சிக்கியிருக்கும் 14,800 இந்தியர்களை மீட்பதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளது. ஏர் இந்தியா  விமானங்கள் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. சுமார் 64 விமானங்கள் இந்தியாவில் இருந்து இயக்கப்படவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த விமானங்களில் சமூக இடைவெளியை  கடைப்பிடிக்கும் வகையில் 200 முதல் 300 வரையிலான பயணிகள் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள்.
விமானங்களில் அழைத்து வருவதற்கு முன்பாக பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், நீரிழிவு நோய் மற்றும் சுவாச பிரச்னைகள் உள்ளதா  என்பது குறித்து தெரியப்படுத்துவது அவசியம் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே விமான பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கை நாளை முதல் தொடங்குகிறது. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, சவுதி அரேபியா, கத்தார், ஓமன், பக்ரைன் மற்றும்  குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளது.
இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பினராயி விஜயன் எழுதியுள்ள  கடிதத்தில், கொரோனா தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்யாமல் அவர்களை தாயகம் அழைத்து வருவது அபாயகரமான செயல் என்று அவர் கூறியுள்ளார். ஒரு விமானத்தில் 200 பேர் அழைத்து வரப்படும் நிலையில், அவர்களில்  யாராவது ஒருவருக்காவது தொற்று இருந்தால், அது மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த விவகாரத்தில் சர்வதேச விதிமுறைகளை மத்திய அரசு பின்பற்றவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459