கொரோனா தாக்கினால், நீரிழிவு நோயாளிகள் மரணமடையும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம் - ஆசிரியர் மலர்

Latest

19/05/2020

கொரோனா தாக்கினால், நீரிழிவு நோயாளிகள் மரணமடையும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம்


டெல்லி : கொரோனா தாக்கினால், நீரிழிவு நோயாளிகள் மரணமடையும் வாய்ப்பு, மற்றவர்களை விட 50 சதவீதம் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும்
அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது.
இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான 3,000 பேரில்  70 சதவீதம்பேர், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, இதய பிரச்சினை ஆகியவற்றில் ஏதேனும் இருந்தவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பி துறை தலைவரும், பேராசிரியருமான டாக்டர் நிகில் டாண்டன் கூறுகையில்,’கொரோனா தாக்கினால், நீரிழிவு இல்லாதவர்களை விட நீரிழிவு இருப்பவர்கள் பலியாவதற்கு 50 சதவீதம்வரை அதிக வாய்ப்பு உள்ளது.உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சினை, புற்றுநோய், சிறுநீரக கோளாறு ஆகிய நோய் கொண்டவர்களுக்கும் ஆபத்துதான்.ஆகவே, நீரிழிவு நோய் இருப்பவர்கள், வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தங்கள் ரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.உடலில் நீர்ச்சத்தை பராமரித்துவர வேண்டும். மருந்துகளை சரியாக உட்கொள்ள வேண்டும். வீட்டிலேயே உடற்பயிற்சிகளை மேற்கொண்டால்,
நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை அமைந்து, மனநலமும், உடல்நலமும் சீராகும்,’ என்று அவர் கூறினார்.
மேலும் டெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பி மற்றும் நீரிழிவு நோய் துறை தலைவர் டாக்டர் அம்பரிஷ் மித்தல் கூறுகையில், ‘நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதுதான், கொரோனா தடுப்புக்கு முதலாவது முன்னெச்சரிக்கை வழிமுறை.அப்படி கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், சிகிச்சையை தீவிரப்படுத்த வேண்டும். டாக்டர்களிடம் தொலைபேசி மூலம் கூட ஆலோசனை பெறலாம். ரத்த சர்க்கரையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். மாத்திரைகளை நிறுத்தக்கூடாது. சர்க்கரை அதிகமாக இருந்தால், அதை வேகமாக கட்டுப்படுத்த இன்சுலின் பயன்படுத்த வேண்டும். அதற்கு தயங்கக்கூடாது,’என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459