நாடு தழுவிய ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

17/05/2020

நாடு தழுவிய ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு


நாடு தழுவிய ஊரடங்கு, மேலும் பல தளர்வுகளுடன், 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 25-ல் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு, பின்னர் ஏப்ரல் 15ஆம் தேதியும், மே 4ஆம் தேதியும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதி நிறைவடைகிறது. அடுத்த கட்டம் குறித்து, முதலமைச்சர்களுடன் 5ஆவது முறையாகக் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர், கட்டுப்பாடுகள்,
தளர்வுகள் தொடர்பான பரிந்துரைகள் வழங்குமாறு மாநிலங்களை கேட்டுக்கொண்டிருந்தார்.
பொருளாதாரத்தை புதுப்பிக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும், கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் எளிதாக பயணிக்கும் வசதி, ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என பல மாநிலங்கள் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு வெளியிடப்பட உள்ளன.
இந்நிலையில், ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு, அதாவது இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிபந்தனைகளுடன் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுவதோடு, நிபந்தனைகளுடன் உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் செயல்பட அனுமதிக்கப்படலாம்.
அதிகபட்சம் 2 பயணிகளுடன் ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்க அனுமதிக்கப்படலாம்
. புறப்படும் மற்றும் சென்று சேருமிடம் அமைந்துள்ள மாநிலங்கள் அனுமதிப்பதற்கேற்ப உள்நாட்டு விமான சேவை செயல்படும்.
சிவப்பு மண்டலங்களில் மெட்ரோ ரயில்கள் அனுமதிக்கப்படாது. பிற பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். கட்டுப்பாட்டு பகுதிகளையும், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலங்களை வரையறுக்கும் அதிகாரமும் மாநில அரசுக்கு வழங்கப்படும்.
முன்கூட்டியே அனுமதி அளிக்கப்பட்ட தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459